ஸ்ரீ-ராமம்- 128

 அத்தியாயம் 128 


அன்று மதியம் நடந்தவைகள் :


 கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் நீதி அரசருக்கு முன்னால்  லட்சுமியின் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட  அனைத்து குற்றவாளிகளையும் இரண்டாம் கட்ட விசாரணைக்காக  காவல்துறையினர் ஒப்படைத்தனர்.


லாரி டிரைவர்கள், வினோத் மற்றும் மஹிக்கா ஆகியோர் தண்டனைக்கு அஞ்சி அப்ரூவராக மாறி இருந்ததால்,  அருணா கற்பகத்தின் மீதான குற்றங்கள் 100%   நிரூபணமான நிலையில், வழக்கம் போல் தாயும் மகளும்  தங்களது  குற்றங்களை ஒப்புக்கொள்ளாமல்  வழக்காடு மன்றத்தில் விதண்டாவாதத்தில் ஈடுபட,  ஒரு கட்டத்தில்,  ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை  விசாரணைக்கு எடுக்க காவல் அதிகாரிகள் அனுமதி  கோர,  நீதிமன்றமும் அனுமதி வழங்க, அருணா கற்பகம் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.


"அடியேய்...  ஆத்தாளும் மவளுமா  சேர்ந்து, மாசமா இருக்கிற பொண்ணுன்னு கூட பாக்காம லாரி ஏத்தி கொல்ல பார்த்ததோட கையும் களவுமா சிக்கினதும்  போலீஸ் தரப்பு பணம்  வாங்கிட்டு பொய் சொல்றாங்கன்னு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா கோர்ட்லயே வந்து சொல்லுவீங்க .... ... "  என்றபடி கற்பகம் மற்றும் அருணாவை  தலைமை பெண் காவல்  அதிகாரி சரமாரியாகப் புரட்டி எடுக்க  வலி தாங்க முடியாமல்  இருவரும் துடித்து துவண்டு தரையில் உருண்டனர். 


"இப்ப வரைக்கும் ஹாஸ்பிடல்ல இருக்கிற அந்த பொண்ணுக்கு நெனைவு திரும்பல ... அந்தப் பொண்ணுக்கு நல்லபடியா நெனைவு திரும்பிடுச்சின்னா  உங்களோட பத்து வருஷ தண்டனைல கொஞ்சமே கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கு .... ஒருவேளை அந்த பொண்ணு செத்துப் போச்சுன்னு வை, கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும்  கம்பி எண்ணிக்கிட்டே களி தின்ன வேண்டியது தான்.....

அப்படி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு செத்தே போயிடலாம்னு தோணிடும்....  கூடிய சீக்கிரம் அப்படி  தோண வைக்கிறேன் ..... "


என தொடர்ந்தவர் அருணாவின் தலை முடியை கொத்தாக பற்றி தூக்கி நிறுத்தி,


"என்னோட 15 வருஷம் சர்வீஸ்ல,  யாருகிட்டயும் லஞ்சன்ற பேர்ல பத்து காசு பிச்சை எடுத்ததில்ல டி...  இந்த சகுந்தலான்ற பேரை கேட்டாலே மேல் அதிகாரிங்கள்ல இருந்து சென்ட்ரி வரைக்கும் சும்மா அதிரும்....... அப்படிப்பட்ட என்னை பார்த்து  கோர்ட்டுல ,  அவ்ளோ பேர் முன்னாடி  காசு வாங்கிக்கிட்டு  பொய் சொல்றேன்னா சொல்ற....இனிமே நீ வாழ போற ஒவ்வொரு நொடியும் உனக்கு நரகம் தான்...

சாகாமலே நரகம் எப்படி இருக்கணும் உங்க ரெண்டு பேத்துக்கும் காட்டறேன் .... உங்கள அடிச்சு லாக் அப் டெத் பண்றதுக்கு எனக்கு ரெண்டு நிமிஷம் ஆவாது .... ஆனா அவ்ளோ சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் செத்துடக்கூடாது ....  செத்துட்டா நல்லா இருக்குமேன்னு நெனைச்சு  நெனைச்சு ஒவ்வொரு நாளும் நீங்க ரெண்டு பேரும் கதறி துடிக்கணும் .... அத  பார்த்து நான் ரசிக்கணும்..... ... "


என்றபடி அவளது கன்னமே கிழிந்து தொழுகும் அளவிற்கு தன் கை தடத்தை பதித்து விட்டே அவர் விடை பெற, தாயும் மகளும்  மரண பீதியில்  உறைந்து சரிந்தனர்.



ஊட்டியில் ....


மருத்துவர்கள்  மூன்று  மணி  நேரத்திற்கு ஒரு முறை  லட்சுமியிடம் அவளது  கணவன், குழந்தை,  தாய், தந்தை,  உடன் பிறந்தவர்கள்,  உறவினர்கள் என யாரேனும் ஒருவர் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவளுடனான நல்ல நினைவுகளை நினைவுபடுத்தி  உரையாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்ததால்  ராம்சரண் , 

ருக்மணி, ராமலட்சுமி, ரங்கசாமி சிவகாமி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக  அவளுடனான நல்ல நிகழ்வுகளை பேசிப் பேசி நினைவு கூர்ந்தனர். 


அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு மேல் ஆன நிலையில், உடல் நிலையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை என்றாலும்,  பின்னடைவும் ஏதுமில்லாததால் 

சிறு திருப்தியோடு மருத்துவர்கள் கூறிய வழிமுறைகள் அனைத்தையும் விடாமல் பின்பற்றினர்.


பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில்(NICU) சேர்க்கப்பட்டிருந்த இரட்டை  குழந்தைகளும் சிகிச்சைக்கு பிறகு இயற்கையாக சுவாசிக்க தொடங்கி இருந்ததால் செயற்கை சுவாசம் நீக்கப்பட்டிருந்தது என்றாலும்,  எடை குறைவு மற்றும் ( குறை பிரசவ குழந்தைகளுக்கான) மஞ்சள் காமாலையின்  அறிகுறிகள் இருப்பதால் இன்னும் சில தினங்கள்  அங்கு சிகிச்சை எடுத்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்ததால்,  ராம்சரண் , ரங்கசாமி ,ருக்மணி , ராமலட்சுமி, ஸ்ரீனி ஆகியோர் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாய் அலைந்து கொண்டிருந்தனர்.


தான் நடத்தி வரும் மருத்துவமனைக்கு  அதிக நாள் விடுப்பு அளிக்க முடியாது என்பதால்  ஸ்ரீனியின் தமக்கை சுமித்ரா தன் குடும்பம் மற்றும் தாய் தந்தையரோடு கோயம்புத்தூருக்கு  முன்தின இரவே பயணப்பட்டிருந்தாள். 


பயணப்படுவதற்கு முன், லட்சுமி மற்றும் குழந்தைகளை நன்றாக பரிசோதித்து விட்டு உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் தெரிவதால் கூடிய விரைவில் லட்சுமி மற்றும் குழந்தைகள் வீடு திரும்புவார்கள் என்ற நற் செய்தியையும் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தாள். 


ஸ்ரீனி , ராமலட்சுமி இருவருமே திருமணத்திற்கான விடுப்பில் இருந்ததால்,    தங்களாலான உதவிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய,  ராம் சரணுக்கு மட்டும் அவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதில் சிறு தயக்கம்  இருக்கவே செய்தது.


இருவருமே நீண்ட பெரிய போராட்டத்திற்குப் பிறகு,  ஒருவரை ஒருவர் மனமார புரிந்துகொண்டு  திருமணம் என்னும் புனித பந்தத்தில்  இணையும் தருவாயில்  , இப்படி ஒரு  பேரிடி தன் வாழ்க்கையில் விழுந்ததால், தங்களது  திருமணத்தை  கூட அவர்களால் முழு மன நிறைவோடு செய்து கொள்ள முடியாமல் போனதோடு  இந்தக் கணம் வரை திருமண வாழ்க்கையை தொடங்காமலேயே  அவனது குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பதும் அவனுக்கு பெருத்த வருத்தத்தை கொடுக்க,  உதவியை மறுக்கும் நிலைமையிலும் அவனது சூழ்நிலை இல்லாததால் யாதொரு முடிவையும் எடுக்க முடியாத கையறு நிலையில்  தடுமாறி கொண்டிருந்தான் . 


இந்நிலையில் அன்று மாலை வழக்கம் போல்  குழந்தைக்கு  சிவகாமி  சிற்றுண்டி ஊட்டி முடித்ததும்,  குழந்தையை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல காரை நோக்கி அவன் சென்ற போது ,


"த.... தம்பி.... எ... என்னை மன்னிச்சிடுங்க தம்பி.... ... "  என்று கமரிய குரலில் லேசாக கதறியபடி ஓட்டுனர் பன்னீர் கார் அருகே நின்று கொண்டு கூனிக்குறுக,


"என்ன ஆச்சிண்ணே... ஏன் இப்படி பேசறீங்க..... ... " என்றான் ராம்சரண் புரியாமல்.


"என்னால தான் தம்பி லக்ஷ்மிம்மாவுக்கு இப்படி ஆயிடுச்சு ..."


"என்ன சொல்ல வரீங்க ...சரியா சொல்லுங்க புரியல ..."


"ல... லக்ஷ்மிம்மா எப்பவும்  என்கிட்ட  சொல்லுவாங்க ... குடி குடியை கெடுக்கும்னு.... நான் குடிச்சு குடிச்சு என்  குடி கெட்டதோட உங்க குடியயும் சேர்த்து கெடுத்துட்டேனே தம்பி..... லக்ஷ்மிம்மாவுக்கு விபத்து நடந்த முந்தின நாள் ராத்திரி, எக்கச்சக்கமா குடிச்சிட்டேன்  ..... மத்தா நாள் எழும்பவே காலையில பத்து மணிக்கு மேல ஆயிடுச்சு ... ஏஞ்சதும்  சரியான தலைவலி ... நிக்க கூட முடியாம லேசா கேரா இருந்துச்சு ... 

வழக்கம் போல டீ குடிச்சா சரியாயிடும்னு டீ குடிச்சிட்டு, நம்ம வீட்டுக்கு வந்தேன்... அப்பவும் தலைவலி, கை , கால் நடுக்கம் எதுவுமே போவல ... 

தோட்டத்துல கறி காய் எல்லாம் அறுவடை செஞ்சிக்கினு  இருந்தாங்க  ... விட்டா மத்தா நாள் தாங்காதுங்கறதால  பக்கத்துல தானே மார்க்கெட்டுனு  குட்டி யானைல அள்ளி போட்டுகிட்டு  போய் வித்துட்டு வந்தேன் ...

அப்ப தான் நீங்க லட்சுமிம்மாவையும் குழந்தையும் கூட்டிகினு போய் எஸ்டேட்ல விட சொன்னீங்க ....ராத்திரி  குடிச்சது தெரிஞ்சா  லட்சுமிம்மா கோவிச்சுக்குவாங்க, அதோட எப்பவும் போற எஸ்டேட் தானேனு சமாளிச்சுக்கலாம்னு நினைச்சு வண்டியை எடுத்ததால தான்,  லாரி காரவுங்க எதிர்க்க  வேகமா வர சொல்ல கூட,  என்னால சுருக்கா வண்டிய ஒடச்சு திருப்ப முடியல ... கை , கால்லயும் நடுக்கம் இருந்ததால , பிரேக்ல என்ன அழுத்தம் கொடுத்தாலும் வண்டி

நிக்காம போய்க்கினே இருந்ததால தான் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு .... அன்னைக்கு நீங்க வண்டி ஓட்டியிருந்தீங்கன்னா, நிச்சயமா ஆக்சிடென்டே நடந்திருக்காது லட்சுமிம்மாவும் இப்படி ஆஸ்பத்திரில உயிருக்கு போராடிக்கினு  இருக்க மாட்டாங்க... .... அந்த அம்மா இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து சாப்டீங்களாண்ணேனு கேட்டு கேட்டு சாப்பாடு போடுவாங்க ... அப்படிப்பட்டவங்க  இந்த குடிகார பாவியால வாழ்வா சாவானு  போராடிக்கினு இருக்காங்க... என்னை மன்னிச்சிடுங்க தம்பி.... .... " 


அழுது கொண்டே ஓட்டுனர் பன்னீர்செல்வம் ராம்சரணின் காலில் விழ ,


"ஐயோ... இப்படி எல்லாம் செய்யாதீங்க .. எழுந்திருங்கண்ணே .... நடந்தது நடந்து போச்சு .... நீங்க கொஞ்சம் கவனமா இருந்திருந்தா  லஷ்மிய  காப்பாத்தியிருக்கலாம் .... இருந்தாலும்,

லாரி டிரைவருங்க பிளான் பண்ணி வந்ததால தான் ஆக்சிடென்ட்டே நடந்திருக்கு .... சோ அத பத்தி ரொம்ப யோசிக்காதீங்க ... ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்குங்க... இனிமே எந்த காரணம் கொண்டும் குடிக்காதீங்க ...."

என்று இறுகிய குரலில் அறிவுரை கூறிவிட்டு குழந்தையோடு மருத்துவமனைக்கு பயணமானான். 


மருத்துவமனையை அடைந்ததும்  குழந்தையோடு லட்சுமியின் அறைக்குச் சென்றவன்,  துக்கம் தொண்டை அடைக்க  கிழிந்த நாராய் காட்சி அளித்த மனைவியின் உணர்வற்ற கரத்தை  பற்றிக்கொண்டு கண் கலங்கிய படி, அமர்ந்தவன் 


"லட்சுமி,  உன்னை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் .... 

ஆனா லவ் பண்ணினேனானு  கேட்டா, எட்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நிச்சயமா பதில் சொல்ல தெரியாம  யோசிச்சிருப்பேன் ... அப்பெல்லாம் ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டோம் குழந்தை பெத்துக்கிட்டோம்னு இருந்தேனே ஒழிய,  நம்பி வந்தவள சந்தோஷமா வச்சிருக்கேனான்னு கொஞ்சம் கூட யோசிச்சதில்ல...... அதனால தான் நீ வீட்ட விட்டு போய் மூணு மாசம் ஆகியும், உனக்கு ஒரு போன் கூட பண்ணாம அலட்சியமா இருந்துட்டேன் ..... 


ஆனா இப்ப நான் ரொம்ப மாறிட்டேன் லஷ்மி.... நீ இல்லாத வாழ்க்கையை என்னால  நினைச்சு கூட பாக்க முடியாது .... நமக்கு புதுசா பொறந்த ரெண்டு குழந்தைங்களும்  NICUல இருக்கு ... நானும் ஸ்ரீ பாப்பாவும்

நீ எப்ப கண்ணை முழிப்பனு,  உயிரை கைல புடிச்சுகிட்டு காத்துகிட்டு இருக்கோம்...  ப்ளீஸ் லக்ஷ்மி நான்  உன்னை அப்ப  அலட்சியப்படுத்தின மாதிரி, நீ  இப்ப எங்கள  அலட்சியப்படுத்திடாத .... 

 ராமலட்சுமி கல்யாண விஷயத்துல காமாட்சி பொய்  சொன்னதும் எனக்கு தெரியும்,  வெற்றி நம்ம வீட்ல உன் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினதால தான் நீ வீட்டை விட்டு வெளியே போனேங்கிறதும் எனக்கு தெரியும்...... எல்லாம் தெரிஞ்சும் , உன் ஹெல்த் கண்டிஷன் சரி இல்லாததால டெலிவரிக்கு அப்புறம் எல்லாத்தையும்   சொல்லி சாரி கேட்டுக்கலாம்னு இருந்தேன்  ... ஆனா அதுக்குள்ளயும் உனக்கு  இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலம்மா ... 


ஆனா எல்லா உண்மையும் தெரிஞ்சதுக்கு அப்புறம்  உன் மேல தப்பு இல்லன்னு புரிஞ்சுகிட்டு தான்  உன்னை தேடி வந்தேன்னு மட்டும் நெனைச்சிக்காத ... 


நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு எப்ப எனக்கு புரிஞ்சுதோ அப்பவே நான் கோயம்புத்தூர விட்டு கிளம்பிட்டேன்...  அதுக்கப்புறம் தான் காமாட்சி பொய் சொன்னது எல்லாம் தெரிய வந்துச்சு ...


ஆனா நீ நடந்த , எந்த  கசப்பான விஷயங்களயும் மனசுல வச்சுக்காம நான் சாரி கேட்கணும்னு கூட எதிர்பார்க்காம அப்படியே என்னை  ஏத்துக்கிட்ட பாரு ... 


அங்கயும் நீ தான் லட்சுமி ஜெயிச்ச  ...

உன்னோட காதலுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்லம்மா.... 


நீ எதிர்பார்த்த அன்யோன்யமான ஆத்மார்த்தமான கணவனா உன் கூட ரொம்ப நாள் வாழனும்னு ஆசைப்படறேன்... ப்ளீஸ்  லக்ஷ்மி ... என்னை ஏமாத்திடாதே ..." 


அவன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கி அழ , தந்தையின் அழுகையைக் கண்டு  மடியில் இருந்த குழந்தையும்  சிணுங்க தொடங்க, அப்போது அவன் பற்றி இருந்த லட்சுமியின் விரல்கள் மெல்ல உணர்வு பெற்று  வளைந்து அவன் கரத்தை மென்மையாய்  பற்றின.


உணர்வின் பிடியில் இருந்ததோடு,   அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்தியதால்,  அவனால் அவள் தொடுகையை உணர முடியாமல் போக,  அப்போது அங்கு வந்த செவிலி பெண்,


"இவங்களுக்கு கொஞ்சம் ட்ரெஸ்ஸிங் பண்ணனும் .... நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா ..." என்றதும், சட்டென்று  குழந்தையை ஒரு கரத்தில்  ஏந்திக்கொண்டு கிளம்ப நினைத்து எழுந்து நின்ற போது தான்,  விரிந்திருந்த லட்சுமியின் விரல்கள் தற்போது மடிந்து அவன் கரத்தைப் பற்றி இருப்பது தெரிய, ஒரு கணம் அவன் இதயம் நின்று துடிக்க



கண்களில் கண்ணீர் ததும்ப,  வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோஷத்தில்,


"வாவ் ....தேங்க் காட் ...." என்றான் உணர்ச்சி பூர்வமாய். 


"சார், என்ன ஆச்சு ..." செவிலி பெண் ஆச்சரியமாய் கேட்க, மௌனமாய் அவன்  தன் கரத்தைக் காட்ட, பார்த்ததும் புரிந்து கொண்டவள் 


" நல்ல விஷயம் சார் ...நான் போய் டாக்டர கூட்டிட்டு வரேன் ...."  அவள் பஞ்சாய் பறக்க , அடுத்த கணமே  அனைவருக்கும் மின்னல் வேகத்தில் தகவல் சென்றடைய மருத்துவர் குழுவோடு லட்சுமியின் உற்றார் உறவினர்களும்  மிகுந்த மகிழ்ச்சியில் அந்த அறையில் கூடினர்.


தலைமை மருத்துவர் லட்சுமியை பரிசோதித்துப் பார்த்தார்.


அவளிடம் வேறு எந்த மாற்றங்களும் தென்படவில்லை.


இமை திறக்க முயல்கின்றாளா .... 

இமைக்குள் விழிப்பந்துகளின் நகர்வுகள் தென்படுகிறதா .... 

கை கால்களில் வேறு ஏதும் அசைவு இருக்கிறதா .....


என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ததில், ராம்சரணின் கைப்பற்றுதலைத் தவிர , வேற எந்த நிகழ்வும் நடந்தேறவில்லை

என்பது உறுதியாக,  அதோடு அவள் உடலோடு இணைக்கப்பட்டிருந்த கருவிகளும் சரியாக பணி செய்து கொண்டிருப்பது தெரிய வர,  திருப்தி அடைந்தவர் 


"யூ ஆர் வெரி லக்கி ராம்சரண் ...  வித்தின் 2 டேஸ்ல லட்சுமி ரெஸ்பான்சிவ் ஸ்டேட்டுக்கு வந்தது ரொம்ப பெரிய விஷயம் ... ஹியர் ஆஃப்டர் நோ வொரிஸ்... டே பய் டே கிராட்ஜுவல் இம்ப்ரூவ்மெண்ட்ஸ் இனிமே கொஞ்சம் கொஞ்சமா நடக்கும்  .... கங்கிராஜுலேஷன்ஸ் .." 

என தலைமை மருத்துவர் ராம் சரணை வாழ்த்த,  கண்களில் ஆனந்த கண்ணீர் தளும்ப மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான் அந்த மாறன். 



--—----------------------------------------------------------


வெவ்வேறு சிந்தனைகளில் மூழ்கி திளைத்தபடி காரை  ஸ்ரீயின் அலுவலகம் நோக்கி மின்னல் வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் வீரா. 


அவன் மனதில் முந்தைய இரவு சுந்தராம்பாள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்  அட்சர சுத்தமாய் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.


தன்னவளின் அகத்தையும் புறத்தையும் ஆட்சி செய்து கொண்டிருப்பவனுக்கு , அவர் சொன்னது 100 சதவிகிதம் சரி என்றே பட முதன் முறையாக அவளை வேலைக்கு அனுப்பியது அதுவும் குறிப்பாக மேலாண்மை பிரிவுக்கு மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவித்தது தவறோ என்று தோன்ற ஆரம்பித்தது. 


குழந்தைக்காகவோ அல்லது தாம்பத்தியத்தில் ஏற்படும்  சிறு சிறு சுணக்கங்களுக்காகவோ அவன் சிந்திக்கவில்லை ....


அவன் அவளவனின் உடல் நிலைகாகவே சிந்திக்க தொடங்கி இருந்தான் ....


மென்பொருள் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட நான்காண்டுகள் முன் அனுபவம் இருந்தும்,  அதனை உதறிவிட்டு மேலாண்மை பிரிவுக்கு  அவள் மாறிக் கொண்டதால்  புதியவைகளை கற்றலுக்கான நேரமும் பணிசுமையும் அவளை வகைத்தொகை இல்லாமல் வாட்டி வதைப்பதோடு , தினமும் மேற்கொள்ளும் கணக்கீடுகள்  ஆழ்மனதின் அமைதி நிலைக்கு பங்கம் விளைவிப்பதால் , அடிக்கடி தலைவலியில் துடிப்பது,  இரவில்  உறக்கமின்றி தவிப்பது போன்றவற்றால் அல்லலுறுகிறாள் என்பதை  எண்ணிப் பார்த்தவன் , அவளது பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தான்.


அப்போது பார்த்து அவன் மனக்ககண்ணில்,  திருமணத்திற்கு பிறகு  ஆஸ்திரேலிய பயணம் வரை,   நினைவடுக்குகளில் குடியேறி இருந்த ஆகச் சிறந்த நிகழ்வுகள்  திரைப்படமாய் விரியத் தொடங்கின.


மாலையில் அவனது வரவுக்காகவே அவள்  காத்திருந்து,  அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவனை  தாவி  அணைத்துக்கொண்ட தருணங்கள் ...


இரவு உணவிற்கு பிறகு, அவன்  கரம் கோர்த்தபடி அன்றைய அலுவல்களை அவள்   பேசிக் கொண்டே நடை பயின்ற தருணங்கள்.... ...


விடுமுறை நாட்களில், தப்பும் தவறுமாய்   அவனுடன்   கிரிக்கெட் விளையாடி அவள் மகிழ்ந்த தருணங்கள் ....


அலுவலகப் பணியில் மூழ்கி இருந்தாலும், அவனை ஒட்டி, உரசி , கொஞ்சி, மிஞ்சி கண்களில் சரசத்தைக் காட்டி,  அவனை அவள் கட்டிலுக்கு அழைத்த தருணங்கள்  ....


போன்ற ஆகச் சிறந்த சர்க்கரை நிமிடங்கள் எல்லாம் கடந்த இரண்டு மாதங்களில் அவளிடமிருந்து என்பது சதவிகிதத்திற்கு மேல்  காணாமல் போயிருப்பது தெரிய வர, முதன் முறையாய்  திணறிப் போய்விட்டான் நாயகன். 


அவன் மனையாட்டிக்கு பொருளாதார சுதந்திரம் முக்கியம்,  அதைவிட அவளுக்கென ஒரு அடையாளம் மிக முக்கியம் என்றெல்லாம் எண்ணியிருந்ததால் தான்  இத்துணை நாட்களாய் இவற்றையெல்லாம் அவன் எண்ணி கூட பார்க்காமல் விட்டிருந்தான்.


ஆனால் இனிமேலும் கையைக் கட்டிக் கொண்டு  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அவனது திருமண வாழ்க்கையோடு அவனது மனையாளும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காணாமல்  போய்விடுவாள் என்ற நிதர்சனம் உரைக்க,

இழந்த தங்களது காதல் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டுமென்றால், முதலில்  சிறிது சிறிதாக ஸ்ருதி தப்பி கொண்டிருக்கும் 

தன் மனைவியின் உடல் நிலையும் மனநிலையையும் மீட்டெடுக்க வேண்டும்  என்ற தீர்வை கணநேரத்தில் கண்டுபிடித்தவன், அதற்கான முயற்சியில் அப்பொழுதே இறங்க முடிவு செய்தான். 


வேகவேகமாக அன்றைய செயல்பாடுகளுக்கான மின்னஞ்சலை கார்த்திகேயனுக்கு தட்டி விட்டு விட்டு, அலுவலக ஓய்வு அறைக்குச் சென்று, அழுது வடிந்த முகத்தை கழுவியவள்,

லேசாக தலைக்கோதி சரி செய்து கொண்டுதுரிதமாய் மின்தூக்கியில் பயணித்து ஓட்டமும் நடையுமாய் அலுவலக வளாகத்தை விட்டு  வெளியே வரவும், வீராவின் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


உரசியபடி வந்து நின்ற காரில் வீராவை  கண்டதும் புரியாமல் குழம்பியவளுக்கு , பிறகு தான் புரிந்தது,  அது சத்யனின் மாமனார் கார் என்று. 


"எவ்ளோ நேரமா இப்படியே நிக்கிறதா ஐடியா.... ...."  வீரா வெடுக்கென்று கேட்க , அவள் அமைதியாய் தலை குனிந்து கொள்ள , 


"ஒழுக்கமா வண்டில ஏறு ... இல்லன்னா ரோடுன்னு கூட பார்க்க மாட்டேன் அள்ளி போட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்..." 

அவன் கோபத்தில் கர்ஜிக்க, பேசா மடந்தையாய்  காரில் ஏறி அவன் அருகில் அமர்ந்தாள்.


கார் நகர ஆரம்பித்ததும்,


"நீ  நாளைக்கே உன் வேலையை ரிசைன் பண்ணிடு  ..." என்றான் எடுத்த எடுப்பில். 


" ஏன்.... என்ன ஆச்சு... ஏன் இப்படி சொல்றீங்க..... ..."  அவள் பதறிய குரலில் வினவ,


"கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கோ ... அப்புறம் வேலைக்கு போலாம் ...."


"இப்படி சொன்னா எப்படி ..... முக்கியமான ப்ராஜெக்ட் வொர்க் போய்கிட்டு இருக்கு .....

எனக்கு 80% ட்ரைனிங் கொடுத்து முடிச்சிட்டாங்க ... இந்த டைம்ல ப்ராஜெக்ட் வொர்க்க அரைகுறையா  விடறது  நல்லா இருக்காது ... ஏன் இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா ...."  சற்று காட்டமாக அவள் பதிலளிக்க,


"சரி இந்த ப்ராஜெக்ட் வொர்க் முடிய எவ்ளோ நாள் ஆகும் ...."


"இன்னும் ரெண்டு வாரத்துல,  கொட்டேஷன், மார்ஜின் வொர்க் எல்லாம் முடிஞ்சிடும் ..."


"அப்ப நான் ஊருக்கு போயிட்டு வந்ததும் நீ பேப்பர் போடு ..."


" என்ன ஆச்சு உங்களுக்கு .... நீங்களும் உங்க வீட்டு ஆளுங்களோடு சேர்ந்துக்கிட்டு வேலைக்கு போனா எனக்கு குழந்தை உண்டாகாதுனு முடிவே பண்ணிட்டீங்களா ..."


"குழந்தை குழந்தைனு குழந்தையை பத்தி பேசியே ஏண்டி கழுத்த அறுக்கிற ....  நான் உன் ஹெல்த் பத்தி மட்டும்  யோசிச்சி  வேலை விட சொல்றேன் ..."


" கவலைப்படாதீங்க .... எனக்கு குழந்தையே பொறக்காதுன்னு தெரிஞ்சு போச்சுன்னா,  நானே உங்கள விட்டு போயிடுவேன் .... கடமைக்காக கடைசி காலம் வரைக்கும் நீங்க என்னை தூக்கி சுமக்க வேண்டிய கஷ்டத்தை எல்லாம் உங்களுக்கு கொடுக்கவே மாட்டேன்.... ..."  நேற்றைய அவன் பேச்சை மனதில் நிறுத்தி அவள் கமரிய குரலில் மொழிய, 


"ரோடுன்னு பார்க்க மாட்டேன் ...  ஓங்கி அறைஞ்சிடுவேன் .... "  அவன் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது, அவனது அலைபேசிக்கு ராம்சரணிடமிருந்து அழைப்பு வந்தது .


ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, தலைக்கேறிய  கோபத்தை கட்டுப்படுத்தியவன்,  பிறகு அழைப்பை அனுமதித்து ஸ்பீக்கரில் போட்டான்.


எடுத்த எடுப்பில் ராம்சரண், மிகுந்த மகிழ்ச்சியோடு லட்சுமியின் உடல் நிலையில் தெரிந்த முன்னேற்றத்தை விலாவாரியாகச் சொல்ல,


"வாவ் கங்கிராஜுலேஷன்ஸ் சரண் ...   லட்சுமி அவுட் ஆப் டேஞ்சர் டா ... இனிமே எல்லாம் சரியாயிடும் ...நான் சொன்ன மாதிரி , கூடிய சீக்கிரம் லட்சுமி உன் கூட பேச ஆரம்பிச்சுடுவா ..." 


என அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆறுதலும், அனுமானிப்புமாய் சொல்ல,


"இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு .....  எனக்கு என் பழைய லட்சுமி கிடைச்சுட்டா போதும் இந்த உலகத்துல வேறு எதுவுமே வேணாம் ..."  என்று உணர்ச்சிபூர்வமாய் பேசிய ராம்சரணிடம், மேலும் சில உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே,  கார் வீட்டை அடைய,  செய்தியைக் கேட்டு மகிழ்ந்திருந்த ஸ்ரீயும் தன்னுடைய வாழ்த்துக்களை அவனுக்கு தெரிவித்துவிட்டு,  காரில் இருந்து விருவிருவென இறங்கி வீட்டிற்குள் நுழைந்தாள்.


வீட்டுக் கூடத்தில் பிரபா , சத்யன் அவர்களுடைய குழந்தைகளோட வீட்டு மூத்தவர்கள் அளவளாவி கொண்டிருக்க 


"வா ப்ரியா ...." என வரவேற்றாள் பிரபா இன்முகத்தோடு .


இயல்பான நலம் விசாரிப்புகள், அன்றைய அலுவல்கள் என உரையாடல்கள் விரிந்து கொண்டிருக்கும் போது ,


"குருமா வச்சிட்டேன்... சப்பாத்தி போட்டு எடுக்கணும் .....???"  என அகல்யா தொக்கி நிறுத்த,  


" நான் சப்பாத்தி போடறேன் அத்தை ..." 

ஸ்ரீ  ஆர்வத்தோடு அடுக்களை நோக்கி திரும்ப, பிரபாவும் அவளை பின்தொடர,


"பிரபா நீ ஒக்காரு ... தேவையில்லாம அடுப்பு கிட்ட நிக்காத ....  மூணாவது பிரசவம் உசாரா இருக்கணும் .... " 


அகல்யா நீட்டி முழக்கிச் சொல்ல,  அதையெல்லாம் கேட்பதற்கு அங்கு ஸ்ரீ இருந்தால் தானே ,  விட்டால் போதும் என அடுப்பங்கரைக்குள் புகுந்து கொண்டாள்.


 போர்டிகோவிலேயே நின்றபடி ராம்சரணிடம் பேசி முடித்துவிட்டு திரும்பிய வீராவின் கண்களில்,  சத்யனின் இளைய மகன் வீட்டு இரும்பு கேட்டில் விருவிருவென்று ஏறிக் கொண்டிருப்பது தெரிய,  


"டேய் சாய், கீழே இறங்குடா .... மேல எலக்ட்ரிக் ஒயர் போகுது ... ஷாக் அடிக்கும்  டா ..." என சொல்லிக்கொண்டே அவன் இளையவனை பிடித்து கீழே இறக்க முயல, அவனோ  கேட்டை பற்றி கொண்டு விடாமல் திமிர,


"இப்ப கேட்ட விட போறயா இல்லையா ... "


"மாட்டேன்  சித்தப்பா .... எனக்கு மேல ஏறனும்.... ...."


" அடேய் ஷாக் அடிக்கும் டா ..." அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , சின்னவன் மேல் நோக்கி வேகமாக செல்ல எத்தனிக்க, வேறு வழி இல்லாமல்  முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி  வலுக்கட்டாயமாக அவனை கீழே இறக்கினான் வீரா.


இறங்கியவனோ அழுது கொண்டே


"என் அப்பாவே என்னை அடிச்சதில்ல ... நீ எப்படி சித்தப்பா என்னை அடிக்கலாம் ..." என  குமுற, அதனைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த சத்யன்,


"அடி செருப்பால,  என்கிட்ட வாங்கின அடி எல்லாம் உனக்கு மறந்து போச்சா ... ஒன்னு மனசுல வச்சுக்கோ ... பெத்த அப்பன் நான் அடிக்கிறேனோ இல்லையோ ....இப்படி எல்லாம் செஞ்சா சித்தப்பன் அடிக்கத்தான் செய்வான் .... " என்றவன் வீராவிடம் திரும்பி,


"இன்னும் ரெண்டு அடி போடுடா ... அப்பதான் இனிமே இவன் இப்படி பேச மாட்டான்  ..."  என்று சொல்ல வீராவோ அமைதியாய் நிற்க , சிறுவனோ 


"எனக்கு சித்தப்பாவ ரொம்ப புடிக்கும் ... ஆனா எப்பவுமே அடிக்காத சித்தப்பா, இன்னைக்கு அடிச்சது தான் புடிக்கல ..." என்றான் விசும்பிக் கொண்டே.


"நீ இத்தனை நாளா  விஷமம் பண்ணல அதனால அவன் அடிக்கல....  இன்னிக்கு விஷமம் பண்ண... அதனால அடிச்சான்... சித்தப்பா கிட்ட சாரி சொல்லு ..." சத்யன் மகனை ஊக்க,


"சாரி சித்தப்பா ...." என்ற மகனை , மென் புன்னகையோடு  அள்ளிக்கொண்டு வீரா கூடத்திற்கு வர,  பழையபடி கலகலப்பான உரையாடல்கள் மீண்டும் தொடர, குழந்தையை இறக்கி விட்டவன், மனைவி அறையில் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டு துரிதமாக அறை நோக்கி சென்றான் .


அவனது அறை இருளில் மூழ்கி இருப்பதை பார்த்ததுமே அவள் அங்கு இல்லை என்று தெரிந்து கொண்டவன்,


"எங்க போனா .... "  என தனக்குத்தானே பேசிக்கொண்டு துரிதமாக புத்துணர்வு பெற்று இலகு உடைக்கு மாறி கீழ் தளத்திற்கு வந்தவனின் விழிகளில், குழந்தைகள் மற்றும்  வீட்டு பெரியவர்களுக்கு அவள் உணவு பரிமாறிக் கொண்டிருப்பது தெரிய,  நின்று நிதானித்து அவன் அவளையே பார்க்க, அவளோ வேண்டுமென்றே அவன் பார்வையை தவிர்த்து விட்டு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள் .


உடனே வீரா அவளைப் பின் தொடர்ந்து செல்ல எத்தனிக்கும் போது,


"பாண்டி நீயும் வாப்பா சாப்பிடலாம் ..."  அகல்யா அழைப்பு விட,


"அவ தனியா செஞ்சுக்கிட்டு இருக்காம்மா...  நானும் போய் கொஞ்சம் கூடமாட ஹொல்ப் பண்ணா வேலை சீக்கிரம் முடிஞ்சிடும் ..."  என வீரா சொல்லி முடிப்பதற்குள்,


"தம்பி நீங்க சாப்பிடுங்க .... நான் ப்ரியாக்கு ஹெல்ப் பண்றேன் ...."  

தன் மருத்துவமனை அறிக்கையை சரி பார்த்துக் கொண்டிருந்த பிரபா சொல்ல,


"வேணாம் அண்ணி ..... நீங்களும் அண்ணனும் கூட சாப்பிட உட்காருங்க... அஞ்சு நிமிஷத்துல எல்லாம் ரெடி ஆய்டும் ..." 

என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் , அடுக்களைக்குள் புகுந்தான்.


சற்று பெரிய அடுப்பங்கரை, அதுவும்  மறைப்பு சுவரோடு உள்ளடங்க அமைந்திருந்ததால்  வந்தவனுக்கு வசதியாகி போக,  தன் இரு கரங்களால் தன்னவளின் இடையை பின்புறமாக இறுக்கி அணைத்து அவளது பின் கழுத்தில்  முகம் புதைக்க,  எதிர்பாராத அந்த நெருக்கம்  பெண்ணவளுள் மின்சாரம் போல்  சிலிப்பை ஏற்படுத்த,  அடிவயிற்றில் பட்டாம்பூச்சி ஊருவது போலான உணர்வைப் பெற்றவள்,




"ம்ச்.... என்னது இது... விலகி நில்லுங்க ... யாராவது வரப் போறாங்க ..." என்றாள் கனிந்த குரலில் .


"யாரும் வர மாட்டாங்க .... எல்லாரும் நீ செஞ்சு போட்ட சப்பாத்தி ருசியில மயங்கி இருக்காங்க ..." 


குறும்பு குரலில் மென் புன்னகையோடு அவன் மொழிய ,


"இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல ..." 


அவனது உடும்பு பிடியிலிருந்து,  விலக எத்தனித்துக் கொண்டே அவள் சொல்ல ,


"வேற எதுலடி உனக்கு குறை வச்சேன்..." 


இம்முறை அடர்ந்த மீசை கொண்ட அவனது தடித்த உதடுகள், அவளது கன்னத்தில் கோலமிட, தன்னை மறந்து ஒரு கணம்


" ஸ்ஸ்ஸ்.." என்றவள்,


"தள்ள்ள்ள்ளி நில்லுங்க... என்னால வேலை செய்ய முடியல..."  என்றாள் இல்லாத கோபத்தை குரலில் கொண்டு வந்து.


" அப்ப ரூமுக்கு வா ...."


" இப்போதைக்கு வர முடியாது எனக்கு வேலை இருக்கு ..."


" அப்ப நானும் இங்கிருந்து நகர்றதா இல்ல..."


" உங்க அம்மா வருவாங்க ..."


" வரட்டுமே ....  என் பொண்டாட்டிய தானே கட்டி புடிச்சுகிட்டு நிக்கிறேன் ... இதுல என்ன இருக்கு ..."


"உங்களுக்கு எதுவும் இல்ல ...ஆனா எனக்கு எல்லாம் இருக்கு .... கிளம்புங்க ..." அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, தன் கரங்கள் கொண்டு அவள் முகம் பற்றி இழுத்தவன்  தன் வன் இதழால் அவளது மென் இதழை முழுவதுமாய் ஆக்கிரமித்தான்.


"பிரியா,  மாமாவுக்கு ரெண்டு சப்பாத்தி கொண்டா ...." என்ற அகல்யாவின் குரலில் தான் சில மணித்துளிகள்  தொடர்ந்த அந்த இதழ் ஒற்றலை முடிவுக்கு கொண்டு  வர , நிதர்சனத்தை உணர்வதற்கு அவளுக்கு ஓரிரு கணம் தேவைப்பட, செஞ்சாந்தாய் சிவந்திருந்தவள்


"எனக்கு கோவம் கோவமா வருது... இது கொஞ்சம் கூட நல்லா இல்ல ..."


"இந்த கிஸ் நல்லா இல்லையா .... வேற புதுசா ஒன்னு ட்ரை பண்ணட்டுமா ...." 


" ஐயோ ... ப்ளீஸ் வெளிய போங்க .... " 


அவள் வார்த்தைகளை கடித்து துப்பிக் கொண்டிருக்கும் போதே,  மற்றொரு  தோசை தவாவை தேடி எடுத்து அடுப்பில் வைத்தவன், அது சூடு ஏறியதும்   அவள் திரட்டி வைத்திருந்த சப்பாத்தியை அதில் போட்டு எடுக்க, அப்போது அங்கு வந்த அகல்யா,


"அவனை ஏம்மா போ சொல்ற ....   இத்தனை பேருக்கும் உன் ஒருத்தியால  மட்டும் சப்பாத்தி திரட்ட முடியாது ....  அவனும் கூட மாட ஒத்தாசை பண்ணா வேலை சீக்கிரம் முடியும்  தானே ..."என்றபடி  ஏற்கனவே ஹாட் பேக்கில்  இருந்த சப்பாத்தியோடு , சூடாக இருந்ததையும்  எடுத்துக்கொண்டு அவர் கிளம்ப,


"பாத்தியா என் அம்மாவே சொல்லிட்டாங்க .... நான் இருந்தா தான் வேலை சீக்கிரம் முடியும்னு ..."


"நீங்க இங்க செஞ்சுகிட்டு இருக்கிற வேலைய பத்தி  அவங்களுக்கு தெரியாது ...  அதான்  அப்படி சொல்லிட்டு போறாங்க  ..." என்றாள்  கழுத்தை வெடுக்கென்று திருப்பி. 



"பாத்து டி .... கழுத்து சுளுக்கு புடிச்சிகிட்டா அப்புறம் எனக்கு தான் கஷ்டம் ..." 


அருகில் நின்றிருந்தவளை உரசிக் கொண்டே சரசமாய் அவன் சொல்ல,  அதற்குள் சாப்பிட்டு முடித்துவிட்டு  வந்த சுந்தராம்பாள்,


" பெரியவனும் பிரபாவும் சாப்பிட போறாங்க...  அவங்களோட நீங்களும் போய் உட்காருங்க ... நான் சப்பாத்தி சூட்டு போடறேன் ..."   என்றதும் இதுதான் சாக்கு என அவள் கிளம்ப, உடனே அவன் அவளது  பிங்க் நிற டாப்பை பற்றி  விலக்கி கண்ணிமைக்கும் கணத்தில்  அவள் இடையை  கிள்ள, 


" ஸ்ஸ்ஸ்ஸ்..."   என்றாள் இளையவள் 

தன்னை மறந்து சற்று பெருங்குரல் எடுத்து.


"என்னம்மா... கையில ஏதாச்சும் தீ பட்டுடிச்சா.... ..."


"இல்ல பாட்டி ..." அவள் சுதாரித்துக் கொண்டே அவனை தீப்பார்வை பார்த்தபடி வெளியேற , மென் புன்னகையோடு  பின் தொடர்ந்தான் அவள் நாயகன். 


பிறகு ஏதேதோ பேசியபடி ஒரு வழியாய் இரவு உணவு முடிய , 


"நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு தானடா உனக்கு பிளைட்டு ..."  சத்யன் வினவ ,


" ஆமாண்ணே ..."


"அப்ப நான் ஒன்பது மணிக்கு எல்லாம் பிரபாவோட  வந்துடறேன் ... நாம ஏர்போர்ட் கிளம்பிடலாம் ...." 


தமையனும் தம்பியும் பயணத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்க,   பரபரவென்று  அடுக்களை வேலைகளை  முடித்தவள் பிரபாவிடம் விடைபெற்று கொண்டு தன் அறைக்கு வந்த போது அவளது மனம் எங்கும் புதுவித எண்ணங்கள் சூழத் தொடங்கின. 


திருமணமாகி இத்தனை மாதங்களில், இருவருக்கும் இடையே  சிறு மனஸ்தாபம் கூட வந்ததில்லை. 


ஆனால் கடந்த 24 மணி நேரமாக இருவருக்கும் இடையே,  பனிப்போர், சொற்போர் , விற்போர் என எல்லா வகை போர்களும் வரிசை கட்டி அரங்கேறிக் கொண்டிருப்பதோடு அவள் கணவனிடம் கண்ட புது வகையான முரட்டுத்தனமும் வன்காதலும் அவளுக்கு மேலும் வியப்பை தர,


"இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சு .... இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டாரே...." 

என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவளுக்கு,  மறுதினம் அவன் பயணப்படவிருக்கிறான் என்ற எண்ணம் மலையாய் மனதை அழுத்த,  கண்கள் கரித்துக் கொண்டு வர,  குழல் விளக்கை அணைத்து இரவு விளக்கை ஒளிர விட்டுவிட்டு,  இருட்டில் கண்ணீர் சிந்த தொடங்கினாள். 


சற்று நேரத்திற்கெல்லாம் தன்னவன் படியேறி வரும் அரவம் கேட்டதும்,  அவள் உறங்குவது போல் பாசாங்கு செய்ய, வந்தவனோ கட்டிலின் மறுபுறத்தில் அமைதியாய் சென்று சயனிக்க, அதன் பின் அந்த அறையில்  கடிகார நொடிமுள்ளின் சப்தம் மட்டும்  வியாபிக்க,


"கிச்சன்ல அவ்ளோ அலப்பறை பண்ணாரு.... இப்ப ஒரு வார்த்தை கூட பேசாம அப்படியே படுத்துட்டாரே .... என்ன ஆச்சு இவருக்கு ..." 

அவள் தனக்குள்ளேயே  பேசிக் கொண்டிருக்கும் போது , ஒருகளித்து படுத்திருந்தவளை ஏறக்குறைய பின்புறமாய் அணைப்பது போல் அவன் நெருங்கி படுக்க


"என்ன வேணும் ...." என்றாள் பெண் ஆவலோடு.  


"சைடு டேபிள்ல என் சார்ஜர் இருக்கா பாரு ..."  அவள் காதோடு உரசிக் கொண்டே அவன் மொழிய,  அந்த நெருக்கம் பாவையவளுக்கு ஒரு வித தகிப்பை கொடுக்க ,  துரிதமாக பக்கவாட்டில் கரம் கொண்டு தேடிப் பார்த்துவிட்டு 


"சார்ஜர் இல்ல ..." என்றாள் அவன் விலகினால் போதும் என்ற எண்ணத்தில்.


" ம்ச்... சரியா பாருடி ..."


"இங்க இல்ல ... அந்த பக்கம் இருக்கான்னு" பாருங்க ...."


"இல்ல ...அங்க தான் இருக்கும் .... " என்றவன் அவளை ஏறக்குறைய முழுவதுமாய் ஆக்கிரமிப்பது போல் தன் முழு உடல் கனத்தை அவள் மீது செலுத்திய படி சார்ஜரை   தேடுவது போல  பாவனை செய்ய,  பின் கழுத்தில் படிந்த  உஷ்ண காற்றும்,  அவனது நெருக்கமும் மங்கையை மையல் கொள்ள செய்ய, 

"ம்ச் ,  என்ன பண்றீங்க ... "  என்றபடி அவள் அவன் புறம் முகம் திருப்ப,  அதுதான் தருணம் என அவள் அதரத்தை முழுவதுமாய் முற்றுகையிட்டான் அவளது உள்ளம் கவர்ந்த கள்வன். 


சில மணித்துளிகள்  தன் எதிர்ப்பை காட்டியவள், அவனுக்கே உரிய பிரத்தியேக மணத்திலும்  ரோமம் நிறைந்த கடின சருமத்திலும் , மெல்ல மயங்கி முற்றிலும் அவனது ஆக்கிரமிப்புக்குள் அடங்கிப் போனாள்.


அடுத்த கணமே எல்லை கோடுகள் அனைத்தையும் தகர்த்தவன்,  தனது கொள்ளை பசிக்கு அவளை விருந்தாக்க ,


விரும்பியே விருந்தானவளும் அவனது விருப்பம் போல் அவன் விரல்களில் வீணையாகி விரக விளையாட்டில் அவனை வீழ்த்த,

அவன் அவளுள்ளும், அவள் அவனுள்ளும் ஆழமாய் அழுத்தமாய் காதல் உச்சங்களை மிச்ச சொச்சம் இல்லாமல் பகிர்ந்து நீள் கலவியில் மூழ்கி திளைக்க,


நாட்காட்டி நடுநிசியை கடந்து நான்காம் ஜாமத்தை நெருங்கும் போது  நாடி நரம்புகளின் நாட்டியங்கள் ஒரு வழியாய் முடிவுக்கு வர ,இரவின் நீட்சியாய் தொடர்ந்த 

கலவி யுத்தமும்  நிறைவாய் நிறைவு பெற, அருமையான கூடல் அம்சமாக நிறைவேறி  ஆகச்சிறந்த இனிமையை அள்ளி கொடுத்த  இரவாய் இருவருக்குமே அது  ஆகி போயிருந்தது. 


சில மணித்துளிகள்  அமைதிக்குப் பிறகு ....

மாறனின் வெற்று மார்பை, வீனஸ் சிலையாய் அரை துகிலில் இருந்தவளின் கண்ணீர் நனைக்க ,


" பட்டு,  என்னாச்சு ... ஏன் அழற ..." என்றான் படர்ந்திருந்தவளின்  கண்களை தேடி  துடைத்தபடி.


"இதுவும் கடமை தானே ...."  அவள் தழுதழுத்த குரலில் வினவ 


"என்னாது கடமையா ... என்னடி ஆச்சு உனக்கு.... .... நான் பாட்டி கிட்ட பேசினத அரைகுறையா கேட்டுட்டு,  இப்படி கடமை கடமைன்னு சொல்லி என்னை படுத்துற .."


"உங்க மனசு தொட்டு சொல்லுங்க ... உங்க வீட்டு ஆளுங்க சொன்னாங்கன்னு தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க .... 

இப்பவும் அதுக்காகத்தானே என்னோட வாழ்ந்துகிட்டு இருக்கீங்க ...."


"ஓ காட் ... உனக்கு என்ன ஆச்சு ...  கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீயா ...

இவ்ளோ  நாள்ல இதான்  நீ என்னை  புரிஞ்சுகிட்ட லட்சணமா  ... நான் செல்ப் மேட் மேன் டி .... யார் சொல்லியும் கேட்கிற ரகமில்ல... எனக்கா புடிச்சிருந்தா தான் எந்த  விஷயமா இருந்தாலும் செய்வேன்... நான் தான் உன்கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல... உன்னை மொத மொதல்ல zoom மீட்டிங்ல பாக்கும் போதே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு ... உன்னை நேர்ல பார்த்து பேசி உன் மனச புரிஞ்சுக்கணும்னு தான் சிட்னியே வந்தேன்னு ...  நான் உன்னை சிட்னில வந்து பார்த்ததெல்லாம் என் வீட்டு ஆளுங்களுக்கு தெரியாதுனும் உனக்கு தெரியுமில்ல ...


உன்னை புடிக்காமலாடி அவ்ளோ  தூரம் தேடி வந்தேன் ...


கட்டினா உங்க பேத்திய தான் கட்டுவேன்னு உன் பாட்டிகிட்ட உன் எதிர்ல தானே சொன்னேன்  ....


இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ ...


உங்க அப்பா மட்டும் ஏதோ ஒரு காரணத்த சொல்லி கல்யாணத்தை நிறுத்தி இருந்தாருனு வை,  யாரைப் பத்தியும் கவலைப்படாம,  ஏன் உனக்கே விருப்பம் இல்லனாலும் கூட  உன்னை கட்டி தூக்கிட்டு வந்தாவது கல்யாணம் முடிச்சு இருப்பேன் ..." 


அவன் வேகமாய் அன்றைய நினைவுகளை மனதில் வைத்து கதைக்க,


"இதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் நம்பற மாதிரி தான் இருக்கு ... இருந்தாலும் நேத்து நைட் பாட்டி கிட்ட ஏன் அப்படி சொன்னீங்க ..."


குலுங்கி சிரித்தவன்,  மார்பில் சரிந்துபடுத்திருந்தவளை அள்ளி எடுத்து தன் மீது நெடுங்கடியாய் படுக்க வைத்து 


"அடியேய் பட்டு ... மூளைய மேத்தமேட்டிக்கல் கால்குலேஷனுக்கு மட்டும் யூஸ் பண்ணா போதாது சில சமயம்  சைக்கலாஜிக்கல் கால்குலேஷனுக்கும் யூஸ் பண்ணனும் ..."


" புரியல...."


"அதான் தெரிஞ்ச கதையாச்சே... சொல்றேன் கேளு ... நான் இயல்பா உன்னை பத்தி பேசினாலே உனக்கு சப்போர்ட் பண்ணி பேசறதா பாட்டியும் அம்மாவும்  நெனச்சிக்கிறாங்க ....

உன் மேல எந்த தப்பும் இல்லாததால சில நேரத்துல உண்மையாவே உனக்கு நான் சப்போர்ட் பண்ணி பேசும் போது , அவங்க ரெண்டு பேரோட கோவமும் உன் மேல  அப்பட்டமா திரும்பறத கொஞ்சம் லேட்டா தான் புரிஞ்சுகிட்டேன் ....


அதான் ஒரு சின்ன மைண்ட் கேம் பிளே பண்ணேன்... வீட்ல இருக்கிற பெரியவங்களுக்கு எப்பவுமே ஒரு பழக்கமுண்டு ...

நாமளா  விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதுல ஆயிரம் குறைகளை கண்டுபிடிப்பாங்க ....

அவங்களா தேடி கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா,  அதுல நாம ஒரு குறை சொன்னாலும்,  அவங்களால அதை  ஏத்துக்கவே முடியாது  ...


அதுவும் எங்க வீட்ல,  அண்ணன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதால அந்த ஈகோ ரொம்பவே அதிகம் ...


அத மனசுல வச்சு தான் ... 


ஏதோ அவங்களுக்காக  உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரியும்,  கல்யாணம் பண்ணிக்கிட்டதால வேற வழி இல்லாம வாழற மாதிரியும் ஒரு பிட்ட போட்டேன் ...என் பாட்டியும் அம்மாவும் டென்ஷன் ஆயிட்டாங்க... ....


அவங்களா பொண்ணு தேடி நடத்தின கல்யாணம்னு  நினைவு படுத்தினதும் கம்ப்ளிட்டா  ஆஃப் ஆயிட்டாங்க  ...

கடைசில  நான் அவங்களை சமாதானப்படுத்துறதுக்கு பதிலா , அவ ரொம்ப நல்ல பொண்ணுனு உனக்கு  சர்டிபிகேட் கொடுத்து  என்னை அவங்க  சமாதானப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க .... இப்ப புரிஞ்சுதா ... ஏன் அப்படி பேசினேனு... இன்னும் ஏதாவது விளக்கம் வேணுமா....

ஆனா ஒன்னு  இந்த விஷயத்தை  இதோட விடறதா இல்ல .... நான் யூகே போய்ட்டு வந்ததும்,  நீ உன் வேலையை ரிசைன் பண்ணிடு ... நாம தனியா  போயிடலாம் ...." அவன் தீர்க்கமாகச் சொல்ல, அதிர்ந்தவள் 


"வேலைய ரிசைன் பண்றது ஒன்னும்  பிரச்சனை இல்ல ... ஆனா நாம ஏன் தனியா போகணும் ...."


"ரொம்ப நாள் இப்படி மைண்ட் கேம் விளையாடிகிட்டு இருக்க முடியாதும்மா...  எல்லாரும் மன நிம்மதியோடு இருக்கணும்னா,  சில நேரம் தள்ளி இருக்கிறது தான் நல்லது  ..."


"நான் தனிக்குடித்தனம் எல்லாம் வரமாட்டேன்..... ...."


" ம்ச், அப்ப வீட்ல எது நடந்தாலும் அரைகுறையா புரிஞ்சுகிட்டு,  என்கிட்ட எந்த விளக்கமும் கேட்காம, போனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு கடைசி வரைக்கும் என்னை இம்சை பண்றதா முடிவு பண்ணிட்டியா .... "


"ராம் ப்ளீஸ் ... வீட்ல பெரியவங்கனு இருந்தா ஏதாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க .... அதெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போயிட்டே இருக்கணும் ..... அதுக்காக தனியா போறது எல்லாம் தப்பு ..."


"அப்ப இனிமே,  எந்த பிரச்சனையா இருந்தாலும்,  யார் என்ன சொன்னாலும், எப்பவும் போல என்கிட்ட நேரடியா சொல்ற  ... புரியுதா .... இந்த மாதிரி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடின கடுப்பாயிடுவேன் ..."

என கடிந்து கொண்டே , அவளை உச்சி முகர்ந்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். 


அவன் வருவதற்கு முன்பாகவே அவள் வேலையை விட்டு விடப் போகிறாள்....

அதைவிட அவன் வீட்டை விட்டே வெளியேறப் வெளியேறப் போகிறாள்.....

இது எல்லாவற்றையும் விட,  உடலாலும் மனதாலும் அவன் நெருங்கவே முடியாத வண்ணம் அவள் முற்றிலும் மாறப் போகிறாள்...


என அவர்களது திருமண வாழ்க்கையை முற்றிலுமாக குழி தோண்டி புதைக்க போகும் அசுப தருணங்கள் வரிசை கட்டி, அரங்கேற  காத்திருப்பதை அறியாமல் அன்றைய கூடல் கொடுத்த இனிமையில், இருவரும் இளைப்பாரியபடி ஆழ்ந்த நித்திரையை தழுவினர் .



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....






























































  

   









 



















 




















 













Comments

Post a Comment