ஸ்ரீ- ராமம்-14

 

அத்தியாயம் 14 

 

 

 தினமும்  உறங்கச் செல்ல பின்னிரவு ஆகிப் போவதால் , காலையில் சற்று தாமதமாகவே உறக்கம் விழிக்கலானான் ராம்சரண். 

 

 உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல்  வார இறுதிக்கு அதனை ஒத்திவைத்துவிட்டு, குளித்து முடித்து தன் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் இருந்து தயாராகி  அலுவலகம் செல்வதே அவனுக்கு பெரும்பாடாகி இருந்தது.

 

விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சரவணனும், ராம் சரணும் ஒரே வாடிக்கையாளரிடம்  பணிபுரிந்தாலும் , சரவணன் சார்பாக கலந்து கொள்ளும் இந்த திட்ட வரைவுக்கான கலந்தாய்வு ராம் சரணுக்கு புதிதுதான்.

 

ஒரே வாடிக்கையாளர் ஆனாலும் வெவ்வேறு திட்ட வரைவு  என்பதால் மென்பொருள் அடக்கத்தின் கணக்கீடு 100% வித்தியாசமாக இருந்தது. 

குறைந்த நேரத்தில் புரிந்து கொண்டு, மில்லியன் ட்ரில்லியனில் அதனை தெளிவாக கணக்கிட்டு தன் நிறுவனத்தின் சார்பாக நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆலோசனைகளை அவன் வழங்கிய விதம்அவன் நிறுவனத்தின் தலைமை மற்றும் வாடிக்கையாளரின் தலைமையிடமிருந்தும்  பெரும் பாராட்டை வாரிக் குவித்திருந்தது.

 

அலுவலகத்தில் இருந்து திரும்பியதும்,   கிடைத்ததை  கொறித்துவிட்டு அடுத்த நாளைக்கான பணிக்கு தயாராவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்க, இந்த அதிரி புதிரி நேரங்களில்  மனைவியை நினைத்தானா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

 

அவளை மறந்தால் தானே  நினைப்பதற்கு ....

 

அவனுக்கு கவித்துவமாக பேசத் தெரியாதுகாதல் பாட்டுக்கள் பாடத் தெரியாதுபேஸ்புக் , வாட்ஸ் அப்பில் மனநிலைக்கு பொருத்தமான ஸ்டேட்டஸ் வைப்பதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது ... 

 

பேஸ்புக்கில் கணக்கு இருக்க வேண்டும் என்பதற்காக  ஒன்றை வைத்து இருக்கிறான் அவ்வளவே.... அதில் யாருடைய பதிவுக்கும் அவன் விருப்பம் தெரிவித்ததில்லை ... அவனாகப் பதிவும் போட்டதில்லை ... அவன் நட்பு வட்டத்தில் யார் இருக்கிறார்கள் என்று அவனுக்கே தெரியாது.... ஆடிக்கு ஒரு தரம்  அமாவாசைக்கு ஒரு  தரம்  அங்கு  எட்டிப் பார்ப்பான் அவ்வளவே...

 

இயல்பிலேயே அதிகம் பேசாத அவன் சுபாவமே  பெரும்பாலும் அதற்கு  அதிக தடையாக இருந்தது ....

 

அவன் தன் விரலாலும் விழியாலும் தன் ஆழ்மன நேசத்தோடு  ஸ்பரிசித்த முதல் பெண் அவன் மனைவி ஸ்ரீ லட்சுமி தான்.   

 

கல்லூரி காலத்தில் அழகான பெண்களை கடக்க நேர்ந்தால்  ரசித்துப் பார்ப்பான்  ... ஆனால் அவை எல்லாம் வெறும் இனக்கவர்ச்சி ... அந்தப் பெண்ணை அந்த நொடியோடு மறந்து விடுவான் ...

 

அடுத்த நாள் அதே பெண்ணை சந்தித்தால் கூடநினைவு வராது ...

 

 நினைவு அடுக்குகளில், அந்தப் பெண் பதிந்திருந்தால் தானே...

 

தற்போது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில பெண்கள் தொழில் முறையில் நல்ல பரிட்சயம் ...

 

அவர்களாகவே வந்து பேசி அவனுடன் நட்பு பாராட்டுவது வழக்கம் ...

 

 விலகியும் செல்ல மாட்டான் ... பெரிதாக அக்கறை எடுத்துக்கொண்டு உரையாடவும் மாட்டான் ....

 

சரியாகச் சொன்னால், அனைவரையும் பார்வையிலேயே தள்ளி நிறுத்தி  இருந்தான். 

 

மற்றபடி தினமும் தன் இறந்த குழந்தையும்துடித்து அழுத மனையாளின் முகமும் மட்டும்  அடிக்கடி நினைவுக்கு வந்து அவனை அலைப்புறச் செய்து கொண்டிருந்தது .

 

அவனைப் பொறுத்த மட்டில் நடந்து முடிந்த அந்த துயர சம்பவத்தில் அவன்அவன் மனையாள்  உட்பட அனைவருக்கும் சரி பங்கு இருப்பதாக கருத்தியதால் பிறரை  குற்றம் கூற மனமில்லாமல் விதியை மட்டுமே நொந்து கொண்டான்.

 

என்னதான் மருத்துவமனையில் மனைவியிடம்  கோபத்தில் வார்த்தைகளை விட்டிருந்தாலும்  தற்போதைய அவளது  மனநிலை மற்றும் உடல் நிலையை கருதி தினமும்  அவளுடன்  அரை மணி நேரம் அலைபேசியில் உரையாடினான் ..

 

அவள் உடல் நிலையை விசாரித்தான் ... ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில் பேசினான். ... கூடிய விரைவில் ஊர் திரும்ப போவதையும் அடிக்கடி மொழிந்தான்....

 

அவன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளிக்காமல் அவளும்  அவன் உடல்நிலைஅலுவலக சூழல்உணவு, தங்கும் வசதி என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு தன்னாலான ஓரிரு அறிவுரைகளை கூறி முடிப்பாள் ...

 

மனைவியாகவே இருந்தாலும் ஆசையாக பேசுவான்ஓரளவிற்கு காதலோடு கதைப்பான் மற்றபடி அந்தரங்க பேச்சுக்கள் எல்லாம் பேச மாட்டான்.... பேச வராது...

 

அன்றாடம் உறங்கும் தருணங்களில் மட்டும் தன்னவளைக் கட்டி அணைத்த நொடிகளும்முத்தமிட்ட மென் தருணங்களும் , அவள் அழகினை அள்ளிப் பருகிய பருவ காலங்களும் மனக்கண் முன் வந்து ஆட்டம் போட்டு அவனை அலைகழிக்கும் ...

 

அவளது சருமத்தின் மென்மையும்அவளுக்கே உரித்தான வாசமும் அவன் நினைவடுக்குகளில் நீங்கமற நிறைந்து அவனை சிதறடிக்கும்...

 

விழித்தெழுந்ததும் அவளது பிஞ்சுக் கரங்களில் விதவிதமாய் கட்டுண்டு கிடக்க

அவன் மனம் தவியாய் தவிக்கும்...

 

பெண் பித்தனோ , கண்ட பெண்களுக்கு பின்னால் சுற்றும் காமுகனோ அல்ல ... அவன் வீட்டு கர்ப்ப கிரகத்தில் குடி கொண்டிருக்கும் அம்பாளை மட்டும் பூஜிக்கும் பக்தன் என்பதால் எத்தனையோ அழகிகள் அவன் மனையாளை விட நிறத்திலும் உடற் கட்டிலும்  மிகுந்த வசீகரத்தோடு சுற்றி வந்தாலும்அவன் மனம் என்னவோ  தன் மனையாளிடம் மட்டும் தான் மண்டியிட்டு கிடந்தது ....

 

அவளது சருமமா, வாசமா அவர்களுக்கான பிரத்தியேக நேரங்களில் அவள் காட்டும் வெட்கமா, கூடிக் களைத்ததும் , அவன் மார்பு கேசத்திற்குள் முகம் புதைத்து இறுக்கிக் கொள்ளும் பாங்கா.. ஏதோ ஒன்று அவனை அடிமையாக்கி இருந்தது....

 

கணவன் மனைவிக்கான நேரங்கள் மட்டுமல்லாமல்அன்றாட சூழலில் அவள் அடுக்களையை நேர்த்தியாக கையாளும் முறை, உணவை ருசியாகவும் ஆரோக்கியமாகவும் தயாரிக்கும் வகைஅவனுக்கு எந்த நேரத்தில் எது தேவை என்பதை முன்பாகவே அறிந்து  செயல்படும் பாங்கு,காட்டன் புடவை மற்றும் காட்டன் சுடிதாரை நேர்த்தியாக அணிந்து வளைய வரும் விதம் என அனைத்திலும் கிறங்கித்தான் போயிருந்தான் .

 

அவன் மனதில் இம்மாதிரியான நினைவுகள் சதிராடிக் கொண்டிருந்தாலும்அதனை வாய் விட்டெல்லாம் அவன் பகிர்ந்ததில்லை.

 

அதிகபட்சமாக ' மிஸ் யூ' என்பான் அவளிடம் ...

 

ஸ்ரீ லட்சுமியை பற்றிய சொல்லவே வேண்டாம் ...

 

அவள் பிறந்து வளர்ந்த சூழ்நிலைஅவளது கல்வி , பணியிடம் எல்லாம் அவளை சற்று இறுக்கமான பெண்ணாகத்தான் வடிவமைத்திருந்தது.

 

தந்தையின் முணுமுணுப்புதாயின் கெடுபிடி எல்லாம்  சேர்ந்து  ஓட்டிற்குள் முடங்கும் ஆமையாக்காமல்  ஓட்டினை சுமந்து  ஊர்ந்து செல்லும் நத்தையாக மாற்றி இருந்தது அவ்வளவே ....

 

நட்பு வட்டங்கள்  வெகு குறைவு.

 

அடுத்தவர்களிடம் அதிவிரைவில் மனம் திறக்கும் சுபாவம் அற்றவள்...

 

எளிதில் உணர்ச்சிவசப்படுபவள்நுட்பமான உணர்வுகளுக்கு சொந்தக்காரி என்பதால்பிறரின் சாதாரண கோப வார்த்தைகள் கூட அவளை  எளிதில் பதம் பார்த்து  ஆழ்மனதின் அடிவரை சென்று  கலங்கச் அடித்து விடும்  ...

 

சுருங்கச் சொன்னால் என்னதான் கணவன் மனைவியாக  ராம்சரணும் ஸ்ரீ லட்சுமியும் கட்டிப் புரண்டாலும் அவர்களுக்கிடையே   வடிகஞ்சியில் காணப்படும்  வெகு மெல்லிய ஏடு போல் ஒரு திரை இருக்கவே செய்தது ....

 

அது ஒன்றும்  ஏற்படுத்திக் கொண்டதில்லை  ... இருவரின் சுபாவங்களால் விளைந்த இயற்கையான  மெல்லிய மறைவு ... அவ்வளவே...

 

அவர்கள் இருவரது அலைபேசி உரையாடல்களை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் ...

 

மிக  இயல்பான  அக்கறையோடு கூடிய  உரையாடலாக தான் இருக்கும்...

 

வாட்ஸ் அப்பில் இமைக்க மறந்து முகம் பார்த்தபடி  கண்களால் அதிகம் கதைப்பர்...

பார்வைகள் சொல்லாததையா வார்த்தைகள் சொல்லிவிடப் போகிறது... என்ற ரீதியிலாக இருக்கும் அவர்களது சம்பாஷனைகள் ...

 

 வார்த்தைகளால் சொல்லத் தவறிய உணர்வுகளை, பார்வைகள் பக்குவமாக எடுத்துரைப்பதால் அதுவே  இருவரின் சுபாவத்திற்கும் வசதியாகி போனது ...

 

இந்நிலையில் முக்கிய கலந்தாய்வை காரணம் காட்டி  இரண்டு நாட்கள் அவளை  அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது என  குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

 

மங்கையின் மனம் மன்னவனின் குரலுக்காகவும் முகத்திற்காகவும் ஏங்க ஆரம்பித்தது ....

 

அவன் அன்றாடம் அவளை தொடர்பு கொள்ளும் அரை மணி நேரம்தான், ஓரளவிற்கு அவள் மன அழுத்தம் இன்றி இருக்கும் தருணங்கள் .....

 

மற்ற நேரங்களில் எல்லாம் மறைந்த மழலையை பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி தவித்தாள் ....

 

தன் கணவன் சொன்னது போல், மற்றவர்களை காட்டிலும் கருவை சுமந்த தனக்கு பொறுப்புகள் அதிகம் இருந்திருக்க வேண்டும் அல்லவா ....

 

ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் ஆகச்சிறந்த தாய் தன் மழலையை காக்க அல்லவா போராடுவாள்….

 

யார் மீதோ  இருந்த கோபமும் ஒன்றுக்கு உதவாத  ஈகோவும், தான்  தன்  குழந்தை இறக்க காரணம் ...

 

மாமியார் நாத்தனார் கணவர் என மற்ற உறவுகள் மீது குற்றம் சாட்டுவதை காட்டிலும்  உடையவளான நான் என் குழந்தை மீது அக்கறையோடு இருந்திருந்தால் இந்த நிலையே வந்திருக்காதே....

 

என் குழந்தை இறந்ததற்கு முழுக்க முழுக்க குற்றவாளி நான் தான் ....

 

என்னைப் போன்ற பொறுப்பற்ற, தான் என்ற கர்வம் கொண்ட தாயாரிடம் வளர பிடிக்காமல் தான் கருவிலேயே கலந்துவிட்டயோ என் கண்மணி .... என உள்ளுக்குள்ளேயே கதறி துடித்தவளுக்கு ஒரே ஆறுதல் அவனுடைய அலைபேசி அழைப்பு தான் ....

 

அவனும் அவளது  தப்பை  அன்று சுற்றிக் காட்டியதோடு சரி .... அதுவும் அவள் கேள்விக்கணைகளை தொடுத்ததால் தான் ... அதற்கு மேல் அது குறித்து இந்த கணம் வரை  வாய் திறந்ததில்லை ...

 

இரண்டு நாட்கள் எப்பொழுது முடியும் என தவம் கிடந்தாள் மங்கை .

 

 48 மணி நேரம் 48 யுகங்களாய் கடக்கமூன்றாவது நாள் தொடர்பில் வந்தவன், எப்பொழுதை காட்டிலும் அதீத  காதலோடு கதைத்தான் ....

 

இரண்டு நாட்கள் அவன் மனம் அவளை தேடியதை  மேல் பூச்சு இல்லாமல்  ஒத்துக்கொண்டவன்அன்று நடந்த கலந்தாய்வின் குறு காணொளி ஒன்றை  அவளது பார்வைக்காக வாட்ஸ் அப்பில் பகிர்ந்தான்.

 

அந்தக் காணொளியில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் அரை வட்ட மேஜை மாநாடு போல் அமர்ந்திருக்க, தன் நிறுவனத்தோடு உடன்படிக்கை செய்து கொண்ட திட்ட வரைவின் வடிவமைப்பு மற்றும் அதற்கான பொருளாதார அறிக்கையை  விரல் நுனியில் செய்முறை விளக்கத்தோடு விளக்கிக் கொண்டிருந்தான் அவளவன்.

 

அவனது  கம்பீரமான  பேச்சு ஆளை அசத்துவது போல் தான் இருந்தது ...

 

என்ன ஒன்று ... அவன் நன்றாக இளைத்திருந்தது நன்றாகவே தெரிந்தது .... கண்களைச் சுற்றி லேசான கருவளையம்வெகு லேசான கமரிய குரல் , மங்கிய சருமம் ஆகியவை  அவன் உடல் நிலை சரி இல்லை  என்பதை சொல்லாமல் சொல்லினாலும்அந்த சாம்பல் நிற கோட் கனக்கச்சிதமாக அவனுக்குப் பொருந்தி இருந்ததோடு அவனது ஆளுமையும் மிடுக்கையும் பன்மடங்காக உயர்த்தி காட்ட, பார்த்துக் கொண்டிருந்த பாவையின் மனம்  தன்னவனின் அறிவாற்றலிலும், நடை உடை பாவனையிலும்  பாகாய் கரைந்தது ...

 

அவன் இந்தியாவில் இருந்த நான்கைந்து நாட்களும் பெரும்பாலும் மருத்துவமனையிலேயே கழிந்திருந்தது.

 

உடனே லண்டன் பயணம் .... அங்குள்ள உணவு முறை ,அலுவலக சூழல், காலநிலைவேலை சுமை , மன உளைச்சல் என  அனைத்தும் சேர்ந்து அவனை அளவுக்கு அதிகமாக வாட்டி எடுத்திருப்பதை உணர்ந்து கொண்டவளுக்கு அது குறித்து அவன் வாய் திறவாததும் நினைவிற்கு வர, கலங்கிப் போனாள் அவன் கண்ணாட்டி.

 

 

தன்னுடைய முன்னேற்றத்தை தன் மனையாளிடம் பகிர்ந்து கொள்ள எண்ணியும் இரண்டு நாட்கள் அவளோடு தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கான காரணத்தை காட்டவும் தான் அந்தக் காணொளியை அனுப்பி இருந்தான் அவளது கண்ணாளன்..

 

" லட்சுமி , இவ்ளோ சக்சஸ் ஃபுல்லா அந்த கான்ஃபரன்ஸ் மீட்டிங் அமையும் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ... அதை விடஒரே கிளைண்ட் ன்னாலும், இது என்னோட ப்ராஜெக்ட் இல்லாததால இத நான் பர்ஃபெக்ட்டா ப்ரெசென்ட் பண்ணினது  கம்பெனியில எனக்கு ரொம்ப நல்ல பேர வாங்கி கொடுத்து இருக்கு .... ஏற்கனவே இந்த வயசுல AVPயா இருக்கிறது பெரிய விஷயம் தான் .. இந்த மீட்டிங்க்கு அப்புறம் , கூடிய சீக்கிரம் VP( வைய்ஸ் பிரசிடெண்ட் ) ப்ரோமோஷன் வர சான்செஸ் அதிகமா இருக்கு .... i am very happy and proud ( மிகுந்த சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது) ...." என்றவன் பேசிக் கொண்டே செல்ல, அவனையே லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள்,

 

" உங்க டீம்ல ஃபீமேல் அசோசியட்ஸ்( பெண் நிர்வாகி)  கூட இருக்காங்களா ..." என்ற கேள்வியை அவள் மெதுவாக தயங்கி தயங்கி முன் வைக்கவெகு இயல்பாக 

 

"ஒரு டீம்னா எல்லாருமே தானே இருப்பாங்க ... ஏன் இப்படி கேக்குற .."

 

"இல்ல ...................... மீட்டிங் முடிஞ்சதும் நிறைய பேரு உங்களுக்கு கங்கிராஜுலேட் பண்ணாங்க ... அந்த ஒரு  பெண்ணு மட்டும் உங்களை ஹக்(Hug) பண்ணிக்கிட்டாங்களே அதனால கேட்டேன் ..." என பேச்சில் அவள் பொடி வைக்க , அதனை ஒரு கணம் கழித்தே புரிந்து கொண்டவனுக்கு சிரிப்பு பொங்கி எழ, அதனை அடக்கி, நுனி நாக்கை கடித்து புருவத்தை உயர்த்தி லேசாக புன்னகைத்தவன்,

 

"சாரிநீ இப்படி யோசிப்பேன்னு நான் யோசிக்கவே இல்ல ...Typical indian wife...( சராசரி இந்திய மனைவி ...)" என்று கூறி அலைபேசியிலேயே அவளது நெற்றியோடு தன் நெற்றியை ஒட்டி எடுத்து மகிழ்ந்தவன் சாட்சாத் மாயக்கண்ணனாய் தெரியமங்கையின் மனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு லேசாக நிறைய, அதற்கு ஆயுள் வெகு குறைவு என தெரியாமல்வேறு சிலவற்றை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

நோய்க்கும் பேய்க்கும் இரவில் தான் கொண்டாட்டம் என்பது போல் அன்றைய இரவு  பல்வேறு சிந்தனைகள் தூண்டப்பட்டு அவளது மன அழுத்தம் ஏகத்துக்கும் எகுற , செய்வதறியாது தவித்துப் போனாள் நாயகி. 

 

அதற்கு முக்கிய காரணம் அவளவன் அனுப்பிய  காணொளி தான். 

 

ஏற்கனவே அவனது பதவியைப் பற்றிய அவள் அறிந்திருந்தாலும், அந்தக் காணொளி அவன் பதவி மீதான காதலை  தெளிவாக எடுத்துரைக்கபுதுவித குழப்பம் ஒன்று அவளை ஆட்கொண்டது. 

 

தந்தை வற்புறுத்தியும் தன்  பரம்பரை தொழிலை  ஏற்காமல், இந்தப் பணியை அவன் தேர்வு செய்ததில் இருந்தேஇந்தப் பணி மீதான அவனது  ஆர்வம் தெள்ள தெளிவாகிறது ...

 

இந்த பதவியில் மாவட்ட ஆட்சியருக்கு நிகரான மாதச் சம்பளத்தை வாங்குகிறான் .... என்ன ஒன்று ... மாவட்ட ஆட்சியருக்கு இருக்கும் அதிகாரமும் ஆளுமையும் இந்த பதவி கொடுப்பதில்லை .... அவ்வளவே...

 

இவ்வளவு சிறப்பானபதவியில், வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் வெகு சாதாரணம் ...

 

இந்தப் பதவியின் அடிப்படை அம்சமே  வெளிநாட்டு பயணங்கள்  என்கின்ற நிலையில்,மறுபடியும் தான் கர்ப்பம் தரிக்க நேர்ந்தால் , நடந்து முடிந்த அனைத்து அசம்பாவிதங்களும் மீண்டும் நடைதேற 100% வாய்ப்புகள் உண்டே...என்று நினைக்கும் போதே அவள் அடிமனத்தில் ஆழிப்பேரலை சுனாமியாய் உருவாகி  பொங்கி வழிந்தது ...

 

அவனால் வெளிநாடு செல்லாமல் இருக்க முடியாது ...

 

அவளால் அவன் வீட்டில் கர்ப்ப காலத்தில் ஏச்சுப் பேச்சுக்களை வாங்கிக் கொண்டு இருக்க முடியாது ...

 

அவளது வீட்டிற்கு  வந்தும் தங்க முடியாது ...

 

இப்படி பல ' முடியாதுகள் ' அவள் முன்பு இருக்கமீண்டும் ஒரு கருக்கலைப்பை தாங்கிக் கொள்ள அவள் உடலிலும் சக்தி இல்லை மனதிலும் சக்தி இல்லை என்பதால்  முடிவெடுக்க முடியாமல் குழம்பித் தவித்தாள் மாது.

 

அவளுடைய இந்த ஆழ்மன பயத்தை கணவனிடம் பகிர நினைக்கும் போதெல்லாம், அவன் மருத்துவமனையில் கொடுத்த பதிலடிகள் அவள் மனக்கண் முன் வந்து  பேய் ஆட்டம் போடவாயடைத்துப் போனாள் அந்த வனிதை. 

 

ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்து கொண்டுகாதலால் கசிந்துருகும் கணவன் மனைவி இருவரும் தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் வாழ்வதெல்லாம் நடவாத  காரியம் .... என்னும் நிதர்சனத்தை அறியாதவனிடம் என்ன பேசுவாள்...

 

எதிர்காலத்தை கருதி தனிக்குடுத்தினம் போகலாம் என்றால் அதற்கும் தடை இருக்கத்தான் செய்தது .

 

ரங்கசாமி அவள் தாயாரிடம்  திருமணத்திற்காக அவள் இல்லம் தேடி வந்து பேசும் போது கேட்டுக்கொண்ட முதல் வாக்குறுதி ஒரே வாக்குறுதி.. எந்த சூழ்நிலையிலும் தனி குடுத்தனம் என்ற பேச்சே எழ கூடாது   என்பது தான் .

 

அவர் திருமணத்திற்காக வேறு எந்த சீரும் கேட்கவில்லை ... 80% திருமணச் செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார் ... அப்படிப்பட்ட மனிதருக்கு கொடுத்த வார்த்தையை மீறுவது மகா தவறு .... என்பதோடு ராம்சரணும் தனி குடுத்தனத்தை விரும்புபவன் அல்ல ....

 

தன் வீட்டையும் தன் தாயின் நிலைப்பாட்டையும் நன்கறிந்தவளாதலால் அவரிடம் பேசியும் பயனில்லை என்று முடிவுக்கு வந்திருந்தவள், கடைசி ஆயுதமாய்  கற்பகமும் அருணாவும் ஆடும் ஆட்டத்தை ரங்கசாமியிடம் கூறலாம் என்றால், தன் மேல் மெகா பிழையை வைத்துக்கொண்டு மாமியார் நாத்தனாரை பற்றி மாமனாரிடம் பேசுவதற்கு அவள் மனம் இடம் கொடுக்காமல் போக அதனையும் கைவிட்டாள் அந்த காரிகை.

 

 

ஏற்கனவே  5 மாத கருச்சிதைவில் குழந்தையை பறி கொடுத்துவிட்டு அதற்குத் தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில் இருந்து  வெளிவர முடியாமல்  துடித்து கொண்டிருப்பவள், இம் மாதிரியான சூழ்நிலையே நீடித்தால்  எதிர்காலத்தில் மற்றுமொரு  குழந்தையையும் இழக்கும் அபாயம் உள்ளதை கணித்துப் பார்த்து கலங்கி இரவெல்லாம் உறங்காமல் உழன்று உழன்று  அதிகாலை ஆறுமணியளவில்  ஒரு முடிவுக்கு வந்தாள். 

 

"இத சொல்ல எனக்கு வருத்தமா இருக்கு... வேற வழியில்ல.... நாம ரெண்டு பேரும் பிரியறது தான் நம்ம ரெண்டு பேரோட எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதுனு தோணுது ... எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடுங்க ..ப்ளீஸ்  ..." என குறுஞ்செய்தி ஒன்றை ராம்சரணுக்கு அனுப்பினாள்.

 

தான் செய்வது சரியா தவறா,   சிறுபிள்ளைத்தனமான முடிவா ... எதையும் யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை ...

 

அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள்  அப்போதைய மன உளைச்சலான சூழ்நிலையை மனதில் நிறுத்தி  எதிர்காலத்தில்  எதுவுமே மாறப் சாத்தியமே இல்லை  என்றெண்ணி நிகழ்கால வாழ்வில் எக்கு தப்பான முடிவை எடுப்பர்...  அதைத்தான் அவள் தரமாக செய்து கொண்டிருந்தாள் ....

 

இயற்கைக்கே காலநிலை மாற்றம் இருக்கும் பொழுது சாதாரண மனிதனுக்கு மன மாற்றம் இருக்காதா.... அல்லது நிலை மாற்றம் இருக்காதா ....

 

உணர்வு பிடியில் சிக்கி தவித்தவளுக்கு இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும் மன நிலை முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. 

 

அடுத்த வாரம் அவன் நாடு திரும்பப் போவதால்  அதற்கு முன்பு தன் முடிவை சொல்லியாக வேண்டும் என்று எண்ணத்தில் அவசரமாக அவ்வாறு  மொழிருந்தாள் ....

 

 

அப்போது லண்டனில் நள்ளிரவு . ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு அலைபேசியின் குயிலோசை லேசாக சிந்தையை தொட்டாலும்உறக்கம் விழிக்க மனம் இல்லாமல் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று உறங்கத்தை தொடர்ந்தான். 

 

 விழிப்பு வந்ததும்வழக்கம் போல்  அலைபேசியை தேடி கண்டெடுத்து, குறுஞ்செய்தியை பார்த்தவன் திடீர் மின்சார தாக்குதலில் சிக்குண்டு சிதைந்தது போல் துடித்துப் போனான் ...

 

"நேத்து வரைக்கும் நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தா .... என்ன திடீர்னு முட்டாள்தனமா இப்படி ஒரு மெசேஜ  அனுப்பி இருக்கா...."

என தனக்குத்தானே வாய்விட்டு புலம்பியவன்உடனே அவள் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க  அவனது அழைப்பிற்காகவே காத்திருந்தவள்முதல் ஒலியிலேயே கைபேசியை காதுக்கு கொடுத்து ஹலோ என்றாள்...

 

" என்ன டி...  முட்டாள்தனமா ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கு.... என்ன அனுப்புறோம்னு தெரிஞ்சு தான் அனுப்பினியா ...." 

 

இந்த ஆறு  மாத பந்தத்தில் முதன்முறையாக கோபத்தில் அவள் மீதான தன்  உரிமையை நிலை நாட்ட 'டி' போட்டு அழைத்திருந்தான். 

 

ஸ்ரீலட்சுமி என்னும் அவளுடைய முழு பெயரை சொல்லி இன்றுவரை அவன் அழைத்தேயில்லை.

 

'லஷ்மி ' என்று தான் அழைப்பான் ... அந்த அழைப்பிலேயே இயல்புஊடல், கூடல் , குழைதல் என அனைத்தையும் அறிந்து கொள்வாள் அவனவள். 

 

 

" ம்ம்ம்ம்..." என்றாள் மென்மையாய். அவன் அழைப்பில் புதிதாய் முளைத்திருக்கும் உரிமையை உணர்ந்தபடி.

 

"உன்னுடைய பிரச்சனை தான் என்ன ... கொஞ்சம் விலாவரியா சொல்றியா ...."

 

மங்கை சொன்னாள் தன் மனதின் பயத்தை ...

 

" உனக்கு என் அம்மாவையும் அருணாவையும் தெரியுமில்ல... அவங்கள திருத்தவே முடியாது .... அவங்கள பிச்சர்லயே சேர்க்காதே...

 

உன் ஹெல்த் கண்டிஷன் ஐ பத்தி நல்லா தெரிஞ்சுவ நீ தான்.... நான் தான் எல்லாத்தையும் மறந்துட்டு புத்தி கெட்டு போய் உன்னை  உங்க வீட்டுக்கு போக சொன்னா நீ ஏன் போன.... நீ உங்க வீட்டுக்கு போனது தான் நடந்த இழப்புக்கு காரணம் ....  நீ ஒத்துக்கலைன்னாலும் அது தான் உண்மை ...." என பழம் பஞ்சாங்கத்தை அவன் பாட, பதில் சொல்ல முடியாமல் தடுமாறிப் போனாள்.

 

" திரும்ப இதே மாதிரி நடந்துடுமோன்னு பயமா இருக்கு  ..." என்றாள் கமரிய குரலில் .

 

அந்த வார்த்தைகள் அவனை தொட்டதோ என்னவோ, ஓரிரு கணம்  அமைதி காத்தவன் 

 

 

" உங்க ஏரியால  எல்லா பிரக்னண்டா லேடிஸ்கும் மிஸ்கேரேஜ்  ஆகி  இருக்கா... இல்ல இல்ல  உனக்கு மட்டும் தானே நடந்துச்சு ... இது முழுக்க முழுக்க உன் உடம்பு சம்பந்தப்பட்டது ...  உனக்கு தான் பெட் ரெஸ்ட் தேவைனு டாக்டர் சொல்லி இருந்தாரு .... நீ அதை செய்யாம  நம்ம வீட்டை விட்டு போனதோட விளைவுதான் அது ... போகாம இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்தே இருக்காதே”  என்றான் அவளது கர்ப்பகால உடல் நிலையை மட்டும் மனதில் நிறுத்தி அப்போதைய அவள்  மனநிலையை மறந்து .

 

 

முழு முதல் குற்றவாளி அவள் தான் என அவள் மனதும் ஒத்துக்கொண்டிருந்த நிலையில் அவனது பேச்சும் அதற்கு தூபம் போடுவது போல் அமைந்து போக, பழியை தன்மேல் போட்டுக்கொண்டு மௌனி ஆகிப்போனாள் அவன் மாது .

 

"இங்க பாரு ... இனிமே இந்த மாதிரி ஏதாவது உளறின நான் மனுஷனா இருக்க மாட்டேன்....  நீ என்னோட வந்து தான் ஆகணும்னு சொல்றேனே ஒழியவாழ்ந்து தான் ஆகணும்னு சொல்லலயே ... நான் சொன்ன வார்த்தையை காப்பாத்துவேன்... போதுமா அடுத்த வாரம் அங்கு வந்ததும் நீ என்னோட கிளம்பி வர  ..." கட்டளை பிறப்பித்து விட்டு  அவளது பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான். 

 

அவள் எதிர்பார்த்ததுஇனி வரும் காலங்களில் உன்னை அம்மாதிரியான சூழ்நிலையில் தனித்து விட்டு செல்ல மாட்டேன் என்ற வார்த்தையை .....

 

ஆனால்  அவளது எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளாமல், தன் பக்கத்து நியாயத்தை மட்டும் கூறி முடித்து அழைப்பை துண்டித்தவனை எண்ணி அழுகையும் கோபமும் ஒருசேர வந்தது.

 

பிறகு இரு தினங்கள் சாதாரணமாகச் சென்றது.  அவன் அவளை தொடர்பு கொள்ளவில்லை.

 

கோபத்தில் இருக்கிறான் போலும் ... ஓரிரு தினங்களுக்குப் பிறகு அழைப்பான் ... இல்லையென்றால்  அழைத்துப் பேசலாம் என்ற முடிவுடன்  அவளும் அமைதியாகிவிட்டாள்.

 

இந்நிலையில்  தியாகராஜன் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருப்பதாக ருக்மணியின் அலைபேசிக்கு செய்தி வந்தது.

 

பதறியடித்துக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் தஞ்சமடைந்தனர். 

 

நல்லவேளையாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது  தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்ததால்கை கால்களில் மட்டும் பலத்த அடி.

 

எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கை கால்கள்  அசைக்க , எழுந்து நடக்க ஒரு மாதம் காலம் ஆகும்மற்றபடி பெரிய பிரச்சனைகள் ஏதுமில்லை என்ற மருத்துவ அறிக்கையை கண்டு ஆறுதல் அடைந்தனர். 

 

இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லாததால், தியாகராஜனின் உடல்நிலை பற்றிய விஷயங்கள் ராம்சரணின் காதுகளுக்கு செல்லவில்லை. 

 

நான்காம் நாள் காலை ராம் சரண் லட்சுமியை தொடர்பு கொள்ளாமல்  ருக்மணியை தொடர்பு கொண்டு  லட்சுமியின்  உடல்நலத்தை விசாரிக்கும் போது தான்அவனுக்கு விஷயமே தெரிய வரதன்னவளின் வீட்டு பொருளாதார நிலையை நன்கு அறிந்தவன் ஆதலால்  ருக்மணி வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தும் கேளாமல் நடந்த செலவுகளை ஓரளவிற்கு அனுமானித்து மொத்த பணத்தையும் அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றினான்.

 

தன் கையில் அணிந்திருந்த இரு பொன் வளையல்களை அடமானம் வைத்து  வைத்தியம் பார்த்திருந்ததால், அதற்கு மேல் மறுப்பதற்கு முடியாமல் குடும்ப சூழ்நிலையை கருதி  ருக்மணியும் அமைதி காத்தார்.

 

 

லட்சுமியை அழைத்துப் பேசாமல் ராம் சரண் அழைப்பை துண்டித்தது ருக்மணியின் மனதில் சந்தேகத்தை விதைத்திருந்த நிலையில் தன் அலைபேசியில் சார்ஜ் இல்லை என்பதால்லட்சுமியின் அலைபேசியில் இருந்து ராமலட்சுமியை whatsapp காலில் அழைக்கும் பொழுது தான், எதேச்சையாக ராம்சரணுக்கு லட்சுமி  அனுப்பி இருந்த குறுஞ்செய்தி அவர் கண்களில் பட கொதித்துப் போய்விட்டார்.

 

"நல்ல புருஷன் அமைஞ்சாலும்  சேர்ந்து வாழ தெரியாத உன்னை எல்லாம் என்ன பண்ணா தகும் ...

 

பெத்த பசங்களே அம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சும் பணம் அனுப்ப மூக்கால அழறா காலமிது ... மாப்பிள்ளைக்கு இதையெல்லாம் செய்யனும்னு தலையெழுத்தே கிடையாது ....

ஒரே நிமிஷத்துல நாம செலவு செஞ்ச  பணத்தை விட கூடுதலாவே மணி டிரான்ஸ்பர் பண்ணி இருக்காரு ...

 

உன்னை அவருக்கு அளவுக்கு அதிகமா பிடிச்சிருக்கிறதால தான் இதை எல்லாம் செய்றாரு....  இதையெல்லாம் புரிஞ்சுக்காம,என்னமோ ஏழு தலைமுறைக்கு உங்க அப்பா பணம் சேர்த்து வச்சிருக்க மாதிரி நெனச்சுக்கிட்டு,டிவோர்ஸ் கேட்டிருக்க ....

 

நமக்கு பிடிச்சவங்களோட வாழற வாழ்க்கையை  விட நம்மள பிடிச்சவங்களோட வாழற வாழ்க்கை சொர்க்கம் தெரியுமா ....

 

அந்த சொர்க்கம் இன்னைய வரைக்கும் எனக்கு கிடைக்கல....

 

சொல்றேன் கேட்டுக்கோ ....

உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல என் அண்ணன் அண்ணி வற்புறுத்தினதால தான் உன்னை  கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ..."னு கல்யாணமான அன்னைக்கே உன் அப்பா என்கிட்ட சொன்னாரு....

 

கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாரு...

 

பொம்பளைங்க தான் கல்யாணத்துக்கு  மறுப்பு சொல்ல  முடியாது... உன் அப்பாவுக்கு என்ன... அவருக்கு என்னை பிடிக்கலன்னதும் வேணாம்னு சொல்லிட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருந்திருக்கலாம் .... நானும் என்னை பிடிச்சவரை  கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா காலம் கடத்தி இருப்பேன் ...

 

அதை செய்யாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு தினம் தினம் அந்த வார்த்தையை சொல்லி என்னை கொஞ்சம் கொஞ்சமா துடிக்க வச்சாரு தெரியுமா ...

 

இத்தனைக்கும் வெட்டி அரசியல் பேசிக்கிட்டு வேலை வெட்டி இல்லாம எங்க வீட்டுல உக்காந்துகிட்டுஆதி காலத்துல அவர் போட்ட ஆட்டம் இருக்கே.... ஆண்டவனுக்கே அடுக்காது ....

 

என்னை பிடிக்கலைன்னு சொல்லும் பொழுது எதுக்காக நான் உன் குழந்தையை சுமக்கணும்னு எனக்கு ''ன்னு கத்தனும் போல தோணும் ....

 

ஆனா எதையும் வெளிப்படையா பேச முடியாத காலம் அது .... உங்க அப்பா போட்ட ஆட்டத்துக்கு எல்லாம் நான் அளவுக்கு அதிகமா பொறுத்து போனதால தான்

இன்னைக்கு குடும்பம் குடும்பமா இருக்கு .... 

 

நீங்க ரெண்டு பேரும் தலையெடுத்ததும் தான் , அந்த காலத்துல அவர் நடந்து கிட்டத்துக்கு இப்ப பதில் அடி கொடுத்துக்கிட்டு இருக்கேன் .... இப்ப வேற வழி இல்லாம பெட்டி பாம்பா அடங்கியிருக்காரு....

 

இவ்வளவு நாள் இதையெல்லாம் நான் உன்கிட்ட சொன்னது கிடையாது .... இப்ப வேற வழி இல்லாம சொல்ல வேண்டிய நிலைமை....

 

இங்க பாரு உங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது .... கேட்டா நீயும்  சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருக்க ... 

 

வாழ்க்கையில அதிக கஷ்ட நஷ்டங்களை பட்டு மேல வந்தவ நான்... நாம் அனுபவிச்ச கஷ்டங்கள்ல 1% கூட நீ இன்னும் அனுபவிக்கல... அதனாலதான் வாழ்க்கையை பற்றிய புரிதல் உனக்கு இல்ல...

 

நடந்தது நடந்து போச்சு ...  பைசாக்கு பிரயோஜனம் இல்லாத இந்த கோபம் எல்லாம் வாழ்க்கைக்கு நல்லதில்ல...

 

பேசாம மாப்பிள்ளை வந்ததும், அவரோட சேர்ந்து வாழற வழிய பாரு...."  என மளமளவென்று பொங்கி விட்டார் ருக்மணி.

 

ருக்மணி பேசியதில் நியாயங்கள்வலிகள், அவரது நீண்ட நாளைய குமுறல்கள்  இருந்தாலும் , அது எல்லாம் அவரது தந்தையின் குணத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்ததால் அவளுக்கு அவரது அறிவுரை சரியாக சென்று சேரவில்லை ...

 

தந்தையின் ஆதிகால ஆட்டம் வலியை கொடுத்திருந்தது.... மற்றபடி தன்னுடைய வாழ்க்கைக்கு அதிலிருந்து அவள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை ...

 

நாயகி சொல்வதற்கெல்லாம் தலையாட்டும்எள்ளு என்றால் எண்ணையாக நிற்கும்சினிமா மற்றும் கதைகளின் கதாநாயகனாக கணவனை  எதிர்பார்த்திருந்தவளுக்கு , அவளுக்காக துளி கூட வளைந்து கொடுக்காமல்  அவன் அவனாக இருந்தது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தியிருந்தது ....

 

 

இந்நிலையில் நாளை மறுநாள் இந்தியா வருவதாக அவனாகவே அவளை அழைத்துச் சொல்ல,

 

" ம்ம்ம்..."  என்றாள் மென்மையாக. 

 

"நான் வந்ததும் ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு போறோம் சரியா ..."

 

"ம்ம்ம்ம்ம்.."

 

" என்ன ...ம்ம்ம்ம்... வாய் திறந்து பேசுடி ..."

 

"எங்க குடும்பத்துக்காகவும், என் அப்பாவுக்காகவும்  நிறைய செலவு செஞ்சி இருக்கீங்க ....உங்களோட வராம போவேனா ..." என்றது தான் தாமதம் 

 

 

" நீ என் பொண்டாட்டிங்கிற உரிமையில கூப்பிட்டா பணம் கொடுத்ததுக்காக வரேன்னு சொல்றியே அசிங்கமா இல்ல ...  உன் குடும்பத்தை என் குடும்பமா நினைச்சு செஞ்சது தப்பா ... இப்படியே ஏடாகூடமா பேசிக்கிட்டு இருந்த  வேணாம்னு வெட்டி விட்டு போறதுக்கு எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது, என் அப்பா பார்த்து பார்த்து பண்ணி வச்ச கல்யாணம் இது .... இதுல ஏதாவது ஒரு பிரச்சனை வந்தாஅவரோட ஹெல்த் ரொம்ப அடிவாங்கும் ... அதுக்காக தான் பேசிகிட்டு இருக்கேன் ..."

 

என வெடிக்கென்று  வார்த்தைகளை கொட்டியவன், ஓரிரு கணம் அமைதி காத்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து

 

"தயாரா இரு.... நான் அங்க  வந்ததும் நம்ம வீட்டுக்கு போலாம் ..." என்று அழைப்பை துண்டித்தான் அவளது பதிலுக்காக காத்திராமல்.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment