அத்தியாயம் 78
"சார் உங்களுக்கு 'அயோத்தி' எஸ்டேட் ஓனர் ரங்கசாமியை தெரியுமா ..." என மனோஜ் ஆச்சரியமாக கேட்க,
"பர்சனலா தெரியாது .... ஆனா என் ப்ரெண்டோட 'ஹாப்பி வேலி' எஸ்டேட்க்கு போன போது அவன் அயோத்தி எஸ்டேட் ஓனர் ரங்கசாமி பிசினஸ்ல பெரும் புள்ளி .... சவுத் இந்தியன் டீ ப்ளான்டேஷனோட ஹெட் , கோல்டன் லீஃப் இந்தியா அவார்ட் வின்னர் அப்படி இப்படின்னு அவரைப் பத்தி நிறைய சொல்லி இருக்கான் ... " என்றவன் ஒரு கணம் எதையோ யோசித்து விட்டு,
"ஆர் யூ ஷூயர்... லட்சுமி அவரோட மகனை தான் கல்யாணம் பண்ணி இருக்காங்களா ...." என்றான் கேள்வியாய்.
"100% பர்ஃபெக்ட் நியூஸ் சார்.... ஆனா இந்த இன்பர்மேஷனை ஊட்டியில இருந்து என் அசிஸ்டன்ஸ் சொல்லும் போது முதல்ல நான் கூட நம்பல .... ஏன்னா என் அசிஸ்டன்ஸ ஊட்டிக்கு அனுப்பறதுக்கு முன்னாடியே நான் இங்க இருக்கிற மேடத்தோட வீட்டு அட்ரஸ தெரிஞ்சுகிட்டு போய் பார்த்தேன் சார் .... அவங்க ஃபேமிலி ரொம்ப சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலினு தெரிஞ்சது ....
அதோட நீங்க லட்சுமி மேடத்தை பத்தி சொன்னதுக்கும், கிடைச்ச இன்ஃபர்மேஷனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம இருந்ததால யாரையும் நம்பாம நானே ஊட்டிக்கு போய் இன்பர்மேஷனை கேதர் பண்ணேன் சார் ..." என்றவன் லட்சுமி தனியாக காரில் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலைக்கு பயணித்த தருணங்கள், ரங்கசாமி உடன் பயணித்த தருணங்களை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாக பகிர்ந்தான்.
தாய்மையின் மிளிர்வில் முன்பை காட்டிலும் பன்மடங்கு பேரழகியாய் காட்சியளித்தவளை ரிஷியின் கண்கள் ஆழ்ந்து வருடிக் கொண்டிருக்கும் போது ,
"இது தான் அவங்க வீடு .... இவரு லஷ்மி மேடத்தோட ஹஸ்பெண்ட் ராம்சரண், சிஇஓ ஆஃப் சிஸ்டம் டெக் ..." என மேலும் சில புகைப்படம் மற்றும் காணொளிகளை மனோஜ் பகிர, வாங்கிப் பார்த்தவனுக்கு ஏனோ பொறாமை உணர்வு பெரும் மழையாய் பொத்துக் கொண்டு கொட்டியது .
அவன் நினைத்தது ஒன்று, நடந்து கொண்டிருப்பது முற்றிலும் வேறு ஒன்றாக இருப்பதால் , ஏற்றுக்கொள்ள மனம் மறுக்க,அவன் மூச்சுக்காற்றை யாரோ பிடித்து நிறுத்துவது போல் ஒருவித பந்தனம் ஏற்பட சிரமப்பட்டு சுதாரித்தான்.
சர்வ லட்சணங்களோடு ஆண்மையின் இலக்கணமாக காட்சியளித்த ராம்சரண் தன் கருப்பு நிற ஜாகுவாரிலிருந்து குளிர் கண்ணாடியோடு ஸ்டைலாக இறங்குவதை காணொளியில் கண்டு ஒரு கணம் இமைக்க மறந்தான்.
ஏழ்மையின் பிடியில், கணவனின் கொடுமையில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருப்பாள் ... சிறை எடுத்தாவது தன் சொர்ண மாளிகையின் சொர்ண ராணியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருந்தவனுக்கு , லட்சுமி கம்பீரமான கணவன், அளவுக்கு அதிகமான பணம், பாரம்பரியமிக்க குடும்பம், பத்தாததற்கு இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகும் பூரிப்பு என அனைத்து விதங்களிலும் அம்சமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதை ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
என் லட்சுமி செல்வ வளத்தோடு அருமையான கணவனுடன் நல்லபடியாக குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதை கண்டு என் மனம் ஏன் நிம்மதி கொள்ளாமல் இப்படி தவிக்கிறது ...
என் மனதிற்கினியவளின் வாழ்க்கையில் அடித்துக் கொண்டிருந்த புயல் அடங்கி தென்றல் வீசத் தொடங்கி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடையாமல் நான் ஏன் பொறாமை கொள்கிறேன் ...
சொல்லப்போனால் அவள் அடுத்தவனின் மனைவி...
ஏதோ எனக்கு உடமைப் பட்டவள், என்னை விட்டு விலகிச் சென்று வேறொருவனுடன் குடும்பம் நடத்துவது போல் அல்லவா என் மனம் துடிக்கிறது ...
என்றெல்லாம் தன்னுள்ளே கேள்வி எழுப்பி பார்த்தவனுக்கு கிட்டிய பதில்.... காதல் ....
இப்படி கூட ஒரு காதல் வரும்மா ... எப்படி சாத்தியம் ...
எதன் அடிப்படையில் என்னால் அவளை நேசிக்க முடிகிறது ....
முன்பு நேசித்ததற்கு காரணம் இருந்தது ...
அவள் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தாள்...
விவாகரத்து பெற்றவனாக அவளோடு என் இரண்டாவது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிவெடுத்திருந்தது சரியாக இருந்தது ....
ஆனால் தற்போதோ கடந்த கால கசடுகளை மறந்துவிட்டு கணவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் கூடிய விரைவில் இரண்டாவது குழந்தைக்கும் தாயாக போகிறாள்...
இந்நிலையில் அவளைப் பற்றி இப்படி சிந்திப்பது முற்றிலும் தவறல்லவா ...
நற் குடும்பப் பின்னணியின் வளர்ப்பு மற்றும் அவனது இயற்கை சுபாவம் எடுத்துச் சொல்ல, தன் எண்ண ஓட்டத்தை மாற்றிக் கொள்ள முயன்றான்..
எவ்வளவு நேர்மறையாக சிந்திக்க முயன்றும் பொறாமை உணர்வு மனம் முழுவதும் வியாபிப்பதை தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு திடீர் யோசனையாய் கேள்வி ஒன்று முளைக்க
"லட்சுமி எஸ்டேட் , ஃபேக்டரிக்கெல்லாம் அவங்க ஹஸ்பண்டோட வந்து போறாங்க இல்ல ..." என்றான் தீவிரமாக.
"இல்ல சார் ... நான் ஊட்டில தங்கி இருந்து அவங்களை ஃபாலோ பண்ணின அந்த ஒரு வாரமும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணாவே பாக்க முடியல சார் ...
ரெண்டு மூணு தடவை ஃபேக்டரிக்கு லட்சுமி மேடம் அவங்க மாமனாரோட வந்தாங்க ... மத்தபடி அவங்க பெரும்பாலும் தனியா தான் கார்ல வந்து போறாங்க.... "
"அட்லீஸ்ட் லட்சுமி ராம்சரணோட வெளியே எங்கேயாவது போனத பாத்தீங்களா...."
'லட்சுமி அவள் கணவனோடு' என ஏனோ திடீரென்று குறிப்பிட பிடிக்காமல் நேரடியாக ராம்சரண் என்ற பெயரை பயன்படுத்தி அவன் கேள்வி எழுப்ப
"நான் அங்க இருந்த வரைக்கும் ரெண்டு பேரும் ஜோடியா வெளிய வந்து பாக்கவே இல்ல சார் ... ரெண்டு பேரும் வேற வேற கார்ல அவங்க அவங்க வேலைக்கு தனித்தனியா போனாங்க... அதுவும் லஷ்மி மேடம் எஸ்டேட், ஃபேக்டரிக்கு போகணும்னா மட்டும்தான் வீட்டை விட்டு வெளியவே வராங்க ... "
என்றதில் அவனுக்குத் தேவையான சிறு பொறி கிட்ட , அது குறித்து ஆராயும் எண்ணத்தில் தீவிரமாக மூழ்கியவனுக்கு அவன் ஆசை மனம் தயாராக அடியெடுத்து கொடுக்கத் தொடங்கியது.
திருமணமான நாளிலிருந்தே கணவன் மனைவிக்குள் ஒத்துப் போகவில்லை ...
அந்தஸ்து வேற்றுமை காரணமாக தருணம் கிடைக்கும் போதெல்லாம் ராம் சரண் சுடு சொற்களால் அவளை காயப்படுத்தி இருக்கிறான் ...
அவள் மீது காதல் கொள்ளாமல் காமம் மட்டுமே கொண்டுள்ளான் ...
குடும்ப சூழ்நிலை காரணமாக பெண்ணவள் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறாள் ...
ஒரு சந்தர்ப்பத்தில் பொறுக்க முடியாமல் விவாகரத்துக்கு செல்லும் போது தான் அவள் தாய்மை அடைந்திருப்பது தெரிய, அதனையே காரணம் காட்டி அவளது மாமனார் அவளை வற்புறுத்தி ஊட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ....
இயற்கையிலேயே சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் உள்ளவளாதளால், வெறுமையாக பொழுதைக் கழிக்க மனமில்லாமல் தொழிற்சாலை மற்றும் எஸ்டேட் சம்பந்தமான வேலைகளை கற்றுக்கொண்டு பணியாற்றத் தொடங்கி இருக்கிறாள் ....
மற்றபடி அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை அப்படியே தான் இருந்து கொண்டிருக்கிறது போலும் ...
வெளியே பார்ப்பதற்கு கண் நிறைந்த கணவன், கை நிறைய காசோடு அவள் டாம்பீக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், உள்ளே தாமரை இலை தண்ணீர் போல் இருவரும் ஒட்டாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
ஆதலால் தான் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் கூட சேர்ந்து வெளியே பயணிக்கவில்லை ....
ஒருவேளை கதை, சினிமாக்களில் வருவது போல், குழந்தை பிறக்கும் காலம் வரை தங்கியிருந்து குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு விலகிடும் உடன்படிக்கையில் ஊட்டிக்கு சென்றிருப்பாளோ.. ... என்றெல்லாம் மித மிஞ்சிய கற்பனையில் மிதந்தவன் அவளது உணர்வுகளை ஆராயும் வகையில் லட்சுமியின் சில காணொளிகளை உற்று நோக்கலானான்.
கர்ப்ப கால மாற்றங்கள், அலுவலகப் பணிகள், தொழிற்சாலை மற்றும் எஸ்டேட்டுக்கு மேற்கொள்ளும் பயணங்கள், கணவனின் மீது தீரா காதல் இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத தருணங்கள் , அவளவனும் அவள் மீது மாறா காதல் கொண்டிருந்தாலும் வெளிப்படுத்தாமல் அவளிடமிருந்து தள்ளி நிற்கும் சமயங்கள் எல்லாம் அவளை வெகுவாக அலை கழித்து சில நேரங்களில் சோர்வை கொடுக்கும் ...
அம்மாதிரியான ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளி ஒன்று ரிஷியின் கையில் கிட்ட, அதில் அவளது முக உணர்வுகளைப் பார்த்து, தான் சற்று முன் எண்ணியது சரி என்றே நினைத்துக் கொண்டு அவளை நேரடியாக சந்தித்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் 'நான்ஸ்டிக்' வாழ்க்கைக்கு முடிவுரை எழுத வேண்டும் என மனதோடு முடிவெடுத்தவன் அதை மனோஜிடம் காட்டிக் கொள்ளாமல்,
" குட் மனோஜ் .... தேங்க்ஸ் அ லாட் ஃபார் யுவர் ப்ராம்ட் சர்வீஸ் .... டைம் 11 ஓ கிளாக் ஆக போகுது ... லட்சுமி நல்லபடியா இருக்காங்கன்னு தெரிஞ்சதும் நிம்மதியா தூக்கம் வருது ... கம் லெட்ஸ் மேக் எ மூவ் ... " என இயல்பாக கூற,
"என்னை ஆஃபிஸ்ல ட்ராப் பண்ணிடுங்க சார்... இன்னைக்கு நைட் ஒரு முக்கிய வேலை இருக்கு ..." என மனோஜ் சொன்னதும், அவனோடு தன் காரில் பயணமானான் ரிஷி.
மனைவி கண் விழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தவனின் மனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.
மருத்துவர் சொன்னதை நினைத்து கூட பார்க்க முடியாமல் உள்ளுக்குள்ளே கதறி துடித்தான்.
திறமை வாய்ந்த , நேர்மையான பெண்ணை ஓரிடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் இந்த உலகம் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் அவள் நடத்தையை பற்றி அவதூறு கூறுவது தான் ....
ஆனால் அதையும் விஞ்சி , வீட்டில் இருந்து ஒரு பெண்ணை அப்புறப்படுத்துவதற்கு பெண்கள் என்ற பெயரில் இருக்கும் அந்த இரு பேய்கள் கையில் எடுத்த ஆயுதம் கொலை பாதகத்திற்கு சமானம் ...
ஒருவரது சுபாவத்திற்கு ஒவ்வாத ஒன்றை நிகழ்த்திக்காட்டி அவரது உணர்வுகளை சாகடிப்பதென்பது கொடூர செயல் ...
தன் மனையாளுக்கு நடந்த கொடூரம் எந்த பெண்ணிற்கும் ஒவ்வாத ஒன்று தான் ... என்றாலும் அதனால் ஏற்படும் சேதாரம் மனோதிடத்திற்கு ஏற்ப ஆளுக்கு ஆள் மாறுபடும் ...
அவனவள் இயற்கையிலேயே சற்று கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால் நடந்த ஒவ்வாமையால் மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறாள் ... அதற்கு அவளது குடும்பப் பின்னணியும் வளர்ந்த விதமுமே காரணம் எனலாம் ....
இரவு விளக்கொளி சற்று கூடுதலாக இருந்தாலே மஞ்சத்தில் கூடல் கொள்ள தயங்குபவள் ....
கணவனே ஆனாலும் வெளிச்ச நேரத்தில் வெற்றுடம்பை காட்ட மறுப்பவள்....
சிற்பம் போல் இருக்கும் தேகத்தை சீரான ஆடைகளால் மூடியே வலம் வருபவள்..
இப்படிப்பட்ட தன்னவளை சற்று கவர்ச்சியாக அவன் கண்டது கோவா பயணத்தின் போது தான் ...
அதுவும் அவன் வற்புறுத்தியதால் கைகள் இல்லா முட்டியை மறைக்கும் அந்த கவுனை ஏகப்பட்ட மறுப்பிற்கு பின்பே அணிந்தாள் ....
அந்த ஆடை கூட பதின் பருவத்துப் பெண் போல் அவளது அழகை கூட்டிக் காட்டியதே ஒழிய, துளி கூட ஆபாசமாக தெரியவில்லை ....
இருப்பினும் எதிர் பாலினத்தவரின் பார்வை எதேச்சையாக அவள் மீது படியும் பட்சத்தில் முட்களின் மேல் நிற்பது போல் அந்த இடத்தை விட்டு விலகவே எண்ணினாள் ...
இவ்வளவு ஏன் வீட்டில் வீட்டு வேலைகள் செய்யும் போதும், குழந்தையை அள்ளிக் கொள்ளும் போது கூட இடை ஆடை விலக அனுமதிக்க மாட்டாள்...
அப்படி ஒருமுறை அவளை மீறி நடந்து, அவன் அதை சுவாரசியமாக பார்த்த போது புடவையை சரி செய்தபடி அவள் முறைக்க, அவன் ரசித்து சிரித்தான் ...
இப்படி கூச்ச உணர்வுள்ளவள் என்றறிந்தே திட்டம் போட்டு அப்படி ஒரு அசிங்கத்தை தன்னவள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்...
அதனை தட்டிக் கேட்க வேண்டிய ஆண்மகனாகிய நான் குறைந்தபட்சம் அவளை தொடர்பு கொண்டு நடந்தது என்னவென்று கூட கேட்கவில்லையே....
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் படித்து, உயர் பதவி வகித்து என்ன பயன்.... தாய் தங்கை சொன்னதை கண்மூடித்தனமாக நம்பினேனே ஒழிய, உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் பகிர்ந்து கொண்ட தாரத்தைப் பற்றி நினைத்துக் பார்க்கத் தவறிவிட்டேனே...
இன்று அவளது கூச்ச சுபாவத்தை அணு அணுவாக ஆராயும் நான், அன்று அவளது யாதொரு உணர்வுகளைப் பற்றியும் சிந்திக்காமலேயே இருந்து விட்டேனே ...
முகதெறியா இரவின் உறவில் கூட அவள் உணர்வுகளை அணு அணுவாக புரிந்து கொள்ளும் நான் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல் அமைதி காத்து விட்டேனே...
என்னையே நம்பி வந்தவள் ... எனக்கு தாரமாக மட்டுமில்லாமல் தாயாகவும் இருந்தவளை என் தன்னகங்காரத்தால் மரணத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டேனே ....
மானம் மரியாதைக்கு கட்டுப்பட்டு ஏழ்மையிலும் நேர்மையாய் வாழ்ந்தவளை காப்பானாக காக்க வேண்டிய கணவனான நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேனே ...
சரியாகச் சொன்னால் படுக்கையில் மட்டும் கணவனாக, ஒரு ஆண்மகனாக இருந்திருக்கின்றேனே ஒழிய, என் பாவையை காக்க வேண்டிய தருணத்தில் பாதுகாக்க தவறிவிட்டேனே....
நடந்ததை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள்ளேயே வைத்து மருகியதால் இன்று என்னவளை மனநோய் ஆட்கொண்டு விட்டதே .....
என உள்ளுக்குள் கத்தி கதறி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தவனுக்கு அருணா கற்பகத்தை வெட்டி வீழ்த்தும் அளவிற்கு கோபம் கொந்தளித்தது.
ஆனால் அதனை செயல்படுத்த வேண்டிய தருணம் இதுவல்ல என்று புத்தி உரைத்தது ....
காரணம் மகாபாரதத்தில் சஞ்சையன் மகாபாரதப் போரில் நடக்கவிருப்பதை திவ்ய திருஷ்டியின் மூலம் உணர்ந்து கொண்டது போல் , தான் இல்லா தருணத்தில் தன்னவளுக்கு நடந்த அசிங்கத்தை அசரீரி போல் மருத்துவர் மூலம் அனுமானித்து அறிந்து கொண்டானே ஒழிய, அதற்கான ஆதாரங்கள் இல்லை ...
பேச வேண்டியவளோ பேசா மடந்தையாய் ஜீவனை இழந்து படுத்துக் கிடக்கிறாள் ...
ஆதாரம் இருந்தாலே அடித்துப் ஆடும் அருணா, இம்மாதிரியான அனுமானத்தை எல்லாம் ஆடிக் காற்றில் பறக்கும் அம்மியாய் ஊதி தள்ளி விடுவாள் ....
அதுமட்டுமல்ல அவனவள் என்னும் கண்ணாடி பாத்திரத்தை கையில் ஏந்தி கொண்டு கயிற்றின் மேல் நடந்து கொண்டிருக்கிறான் ...
இந்நிலையில் இம்மாதிரியான பஞ்சாயத்துகள் , நிச்சயம் அவன் மனையாட்டியின் உயிருக்கே உலை வைத்து விடுமே ஒழிய, வேறு எந்த வகையிலும் உதவப் போவதில்லை ...
அருணா, கற்பகத்தை வெட்டி வீழ்த்துவதை காட்டிலும் தன்னவளை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி கரை சேர்ப்பது தான் தலைமகனான தன் தலையாயக் கடமை என்று உணர்ந்தவன், தந்தையிடமும் மருத்துவர் உரைத்ததை மறைக்கவே எண்ணினான் ...
காரணம், ஏற்கனவே லட்சுமி வீட்டை விட்டு சென்றதைப் பற்றி கவலைப்படாமல் அருணாவும் கற்பகமும் கொண்டாடியதை கண்டு கொதித்துப் போய் அவர்களது ஆடம்பரச் செலவிற்கு மாதாந்திரமாக கொடுக்கும் பணத்தை அடியோடு நிறுத்தியவர் அவன் தந்தை ...
தற்போது லட்சுமிக்கு நடந்ததை அரிய நேர்ந்தால் துளி கூட பாரபட்சம் பார்க்காமல் பெரிய பஞ்சாயத்தை கூட்டி தாயும் மகளையும் வீட்டை விட்டே துரத்தவும் தயங்க மாட்டார் ...
அப்படி நடக்கும் பட்சத்தில் அவனவளும் அருணா கற்பகத்தின் முன்னிலையில் ரங்கசாமியிடம் அன்று நடந்த அசிங்கத்தை ஒன்று விடாமல் பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படும் ...
இன்னும் நான்கு மாத காலமாவது( பிரசவம் முடியும் வரை) மன அழுத்தம் ஏதும் இல்லா வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளுக்கு , இவையெல்லாம் தேவையில்லா மன உளைச்சலை கொடுத்து அவளை உரு தெரியாமல் அழித்து விடும் என்பதை அனுமானித்தே தந்தையிடம் கூறுவதை சற்று தள்ளி வைக்க எண்ணியவனுக்கு மனம் முழுவதும் திராவகம் வீசிய ரணமாய் எரிய தொடங்கியது.
கற்பகம் அருணா மீது கொலை வெறியில் இருந்தவனுக்கு தன்னவள் மீதும் கோபம் வந்தது ...
நடந்தது எத்துணை பெரிய கொடூரம் , நான் தான் தன்னகங்காரத்தில் கேட்காமல் விட்டு விட்டேன் என்றாலும், அவள் என்னை தொடர்பு கொண்டு கூறி இருக்கலாமே ....
சிறு குழந்தைகளிடம் யாரேனும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் பட்சத்தில் வெட்ட வெளிச்சமாக வெளிப்படையாக கூற வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைக்கு தனக்கு நடந்த அநீதியை தன்னவனிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றவில்லையா...
ஏன் இப்படி நடந்து கொண்டாள்... என்னை கணவனாகவே மதிக்கவில்லையா அல்லது கையாலாகாதவன் என்று எண்ணிவிட்டாளா.... என்றெல்லாம் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தவனிடம்
"தேங்க் காட் ..... உங்க வைஃப் கண் முழிச்சிட்டாங்க .... நடந்த எதுவுமே அவங்களுக்கு ஞாபகம் இருக்காது... நீங்களும் எதையும் கேட்காதீங்க ... மெண்டலி அவங்களுக்கு நிறைய ரெஸ்ட் தேவைப்படுது" என மருத்துவர் கூறியதும்,
"டாக்டர், அப்பா கிட்ட நாம பேசின எதையும் சொல்லிடாதீங்க ... ரொம்ப கோவப்படுவாரு ... அப்புறம் தேவையில்லாத பிரச்சினைகள் வரும் ... இப்போதைக்கு லட்சுமியோட ஹெல்த் தான் எனக்கு முக்கியம் அதனால அவளோட ஹெல்த் கண்டிஷன பத்தி மட்டும் அவர்கிட்ட சொல்லுங்க ... ப்ளீஸ் ..."
என தன்மையாக மொழிந்தவனிடம் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக கனிவாக தலையசைத்து விட்டு லட்சுமியின் அறை நோக்கி அவர் முன்னேற , இடிந்த மனதோடு பின் தொடர்ந்தான் ராம்சரண்.
துவண்ட வாழையிலையாய் மேடிட்ட வயிற்றின் மீது கை வைத்த படி கட்டிலில் சரிந்து படித்திருந்தவளை காண காண அவன் உள்ளம் கனத்து, கண்களில் கண்ணிர் பீறிட்டது.
நடந்ததை சொல்லாமல் விட்டு விட்டாளே என்ற கோபமெல்லாம் கசங்கிய பூவாய் காட்சியளித்தவளை கண்டு காணாமல் போக, பொங்கிய மனதை கட்டுப்படுத்திய படி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து
"லக்ஷ்மி ... லக்ஷ்மி ..." என்றான் அவள் தலைக்கோதி மென்மையாய்.
சிரமப்பட்டு கண் விழித்தவளின் கண்களில் கணவனை அறிந்து கொண்டதற்கு அடையாளமாக சிறு மின்னல் வெட்டு தோன்ற, அதனை உள்வாங்கிக்கொண்டவனின் மனதில் இதம் பரவ,
" ஆர் யூ ஓகே நவ் ..." என்றான் வாஞ்சையாக .
"ம்ம்ம்ம்..." என்றவள் படுத்த நிலையிலேயே லேசான அச்சம் கொண்ட பலகீன பார்வையால் சுற்றுவட்டத்தை ஒருமுறை பார்த்ததோடு , பார்வையை தழைத்து தன்னையும் பார்த்துவிட்டு ,
"எனக்கு என்ன ஆச்சு ...." என்றாள் கம்மிய குரலில் யோசனையாய்.
"மயங்கி விழுந்துட்ட.... பட் நவ் யூ ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட் .... ஸ்கேன் எடுத்து பார்த்தாச்சு குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க ... கவலைப்படாத.. " என்றான் மருத்துவரை பார்த்துக்கொண்டே.
நம்ப முடியாத பார்வை ஒன்றை வீசியவளின் விழிகள் அடுத்த கணமே அச்சத்தை தத்தெடுத்துக் கொண்டு
"நா....நான்... டின்னர் சாப்ட்டு தான் தூங்கப் போனேன் .... டேப்லட்ஸ் எல்லாம் கூட சாப்டுட்டேனே... எப்படி மயங்கி விழுந்தேன் .... எப்பவும் போல கட்டில்ல உள்ளடங்க தானே படுத்து தூங்கினேன் .... எப்படி இப்படி ஆச்சு .." என்றாள் குற்ற உணர்வோடு.
அவளது அச்சமும் குற்ற உணர்வும் அந்த சூழ்நிலையில் அவனுக்கு வித்தியாசமாகப்பட,
"இட்ஸ் ஓகே லீவ் இட் ... டேக் ரெஸ்ட் ..." என சமாதானப்படுத்த முயன்றான்.
" நான் வேணும்னே எதுவும் செய்யலங்க... செல்லக்கண்ணு இறந்ததை கேட்டதிலிருந்து ஸ்ட்ரெஸ் அதிகமானதால எப்பையும் விட மசக்கை கொஞ்சம் அதிகமாயிடுச்சு .... காலையில சாப்டதெல்லாம் வாந்தியா வந்துருச்சு... மதியம் சரியா சாப்பிடவே முடியல... " என்றவளின் குரல் அளவுக்கதிகமாக தழுதழுக்க,
"ஸ்ரீ பாப்பா எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே மாறி தான் வயித்துல இருக்கிற குழந்தைகளும் ரொம்ப முக்கியம்..... நீங்க என்கிட்ட டின்னர் சாப்பிட்டு தான் தூங்கணும்னு சொல்லிட்டு போனதுக்கு அப்புறம் நான் டின்னர் சாப்பிட்டு தான் தூங்கினேன் .... ஆனா எப்படி மயங்கி விழுந்தேன்னு எவ்ளோ யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது .... என் மனசறிஞ்சு நான் எந்த தப்பும் செய்யலங்க... ஒரு காலத்துல இந்த குழந்தைகளை கலைக்கணும்னு நினைச்சவ தான்... ஆனா அதுக்கு காரணம் அப்ப இருந்த என் குடும்ப சூழ்நிலை .... அன்னைக்கு அப்படி ஒரு முடிவெடுக்க என் மனச எவ்ளோ கல்லாக்கிக்கிட்டேன்னு எனக்கு தான் தெரியும் .... ஆனா இன்னைக்கு இதெல்லாம் எப்படி நடந்ததுன்னே எனக்கு தெரியல ...நான் எதையும் வேணும்னே செய்யல ... ஐ அம் சாரி.." என கண்களில் பயத்துடன் லேசான விம்மலோடு முடித்தாள்.
அப்போதுதான் அவளது தன்னிலை விளக்கத்திற்கான காரணம் அவனுக்கு புரிய வர, பிரயாத்தனப்பட்டு அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் கண்களில் ஆறாய் வடிய தொடங்க , தன்னை மறந்து எழுந்தவன் துரிதமாக தன்னவளை நெருங்கி அணைத்துக்கொண்டு கதறியே விட்டான்.
அவளுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் அனைத்து கெட்டவைகளுக்கும் அவன் அல்லவா காரணம் ....
எவ்வகையில் யோசித்தாலும் பெரும்பங்கு குற்றம் அவனையே சாரும் என்கின்ற நிலையில், அவள் தன்னிலை விளக்கம் கொடுத்து மன்னிப்பு வேண்டியது அவன் மனதை பாகாய் உருக்க, தன் சுபாவத்தை மீறி மருத்துவர் செவிலியர் இருப்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னவளை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தவன்,
"லக்ஷ்மி ... ஐ அம் சாரி .... உன் நிலைமை புரிஞ்சுக்காம கோவப்பட்டுட்டேன் .... இனிமே அப்படி பேச மாட்டேன் .... நீ பாத்ரூம் போக போகும் போது மயங்கி விழுந்துட்ட போல ... நான் எப்பவும் போல நீ தூங்கிட்டியானு பார்க்க வந்தேன் ... அப்பதான் நீ மயங்கி விழுந்து இருக்கிறத பார்த்தேன் .... உடனே உன்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டேன் ..."
என மனதில் தயார் செய்து வைத்திருந்த பொய்யை கூறி முடிக்க, சற்று முகமலர்ச்சியோடு தலைநிமிர்த்தி பார்த்தவள்,
"எங்க நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களோனு பயந்தே போயிட்டேன் ...." என்றாள் ஒரு பெரும் மூச்சு எடுத்து வெள்ளந்தியாய்.
அவள் பேசப் பேச அவன் குற்ற உணர்வு அதிகமாவதை கண்டு மருத்துவரும் வருந்தினார்.
மருமகள் கண் விழித்ததை செவிலியர் மூலம் அறிந்து கொண்டு அங்கு வந்த ரங்கசாமி , பெற்ற மகளிடம் நலம் விசாரிப்பது போல், பொறுமையாக வாஞ்சையாக நலம் விசாரித்தார்.
பிறகு அவளை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறியவரிடம்,
"அப்பா, நீங்க வீட்டுக்கு போங்க ....நான் இங்க இருந்து இவளை பார்த்துக்கிறேன் ..." என்றான் ராம் சரண் அக்கறையாய்.
ஒரு கணம் யோசித்து
" சரிப்பா நான் கிளம்பறேன் ... ஏதாவதுன்னா போன் பண்ணு வரேன் .... " என்றவர் கிளம்பியதும், அறைக்கு வந்தவன் மருந்தின் வீரியத்தால் அயர்ந்து உறங்கும் மனையாளை ஆழ்ந்து நோக்கினான்.
அவன் மனம் ரணமாய் எரியத் தொடங்கியது.
துரு துருவென பட்டாம்பூச்சியாய் வலம் வரும் அவன் இல்லாள், சிறகொடிந்த சிட்டுக்குருவியாய் சிந்தனையின்றி சயனித்திருப்பது அவன் நெஞ்சில் யாரோ ஆயிரம் கிலோ இரும்பை ஏற்றியது போல் மன அழுத்தத்தை தர, தலையே வெடித்து விடும் போல் தலை வலி ஏற்பட, அங்கிருந்த படுக்கையில் அப்படியே சரிந்தமர்ந்தான்.
இத்துணை நேரமாக தன்னுள்ளேயே போராடிக்கொண்டிருந்தவனுக்கு யாரிடமாவது தன் மனக்குமுறல்களை கொட்டிய தீர வேண்டும் இல்லையென்றால் பைத்தியமே பிடித்து விடும் என்ற நிலை வர, உடனே ஆருயிர் நண்பன் வீரா நினைவுக்கு வந்தான்.
நான்கு நாட்களுக்கு முன்பு அவனே அழைத்துப் பேசி நலம் விசாரித்து இருந்தான்...
முன்பு போல் இருந்தால் நேரம் காலம் பார்க்காமல் அவனைத் தொடர்பு கொண்டிருப்பான் ...
அவனுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு மாதமே ஆகி இருக்கும் நிலையில், நள்ளிரவில் அழைப்பது நாகரீகம் அல்ல என்பதால் விடியும் வரை காத்திருக்க எண்ணியவனின் மனம் முழுவதும் ஒரே கேள்வி தீயாய் பற்றி எரிந்து கொண்டிருந்தது...
"யார்ரா நீ .... உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா நான் இல்லாதப்ப என் பெட்ரூமுக்கே வந்து என் பொண்டாட்டி மேலயே கை வச்சிருப்ப .... கூடிய சீக்கிரம் நீ யாருன்னு தெரிஞ்சுகிட்டு, அந்த ரெண்டு பிசாசுகளோட சேர்த்து உனக்கும் முடிவு கட்றேன் பாரு...."
என வன்மத்தோடு கருவினான் ராம்சரண்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Simply awesome as usual 💕💕💕💕💕
ReplyDeletethanks ma
DeleteSuper mam
ReplyDeletethanks ma
Delete💓💗💓💗💓💓💗💓
ReplyDeletethanks ma
DeleteAsusual interesting to read sis. Superb uh poguthu...
ReplyDeletethanks ma
DeleteMoving very nice. Eagerly waiting for next episode 🌹
ReplyDeletethanks ma
DeleteNice
ReplyDeletethanks ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete