அத்தியாயம் 3
ராம் சரண் ஆடாமல் அசையாமல் நின்ற இடத்தில்
இருந்தே பார்த்துக் கொண்டிருக்க, வீரா சற்று வேகமாக
நடந்து மரத்தடியில் போடப்பட்டிருந்த பென்ச்சில் குழந்தையுடன் அமர்ந்திருந்த
ருக்மணி மற்றும் ஸ்ரீ லட்சுமியிடம் போய் நின்றான்.
பெண்கள் இருவரும் அவனை ஏறெடுத்து பார்க்காமல்
சோகமே உருவான முகத்தோடு தலை குனிந்து கொள்ள,
" லட்சுமி ...." என்றான் வீரா
சற்று கரகரப்பான குரலில்.
நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் குளம்
கட்டியிருக்க, தாடை ஒட்டி, கண்களைச் சுற்றி கருவளையத்தோடு பாதியாக இளைத்திருந்தாள் பெண்ணவள்.
அவ்வாறு அவளை பார்த்ததும்
நெஞ்சில் ஏதோ பிசைவது போல் இருக்க, உள்ளுக்குள்
சற்று கலங்கித் தான் போனான். அவளையும், அவளது குடும்ப பின்னணியையும் நன்கு அறிவான்.
மிகவும் நேர்மையான
பெண், தன்மானம் பார்ப்பவள், உழைப்பாளி,
குடும்பத்திற்கு மூத்த பெண் என்பதால் கடமை உணர்வு அதிகமுள்ளவள்
இவை எல்லாவற்றையும் விட பொறுமைசாலியும் கூட.
அப்படிப்பட்டவள் இப்படி ஒரு முடிவை எடுத்து
இருக்கிறாள் என்றால், நிச்சயம் காரணம் வலுவானதாக இருக்க வேண்டும்
என்றெண்ணி அதைக் கேட்க அவன் முற்படும்
போது,
"எனக்கும் என் குடும்பத்துக்கும்,
நீங்க ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சீங்கன்னா, தயவு செஞ்சு எனக்கு இந்த டிவோர்ஸ் மட்டும்
வாங்கி கொடுத்திடுங்க.... " என்று எடுத்த
எடுப்பில் அவள் படபடத்துவிட்டு கதறி அழ, துடித்துப் போனவன்
" ம்மா, லஷ்மி ... இப்படி எல்லாம் பேசாதம்மா... நீ அவன் வாழ்க்கையில வந்ததுக்கப்புறம் தான் அவன் ரொம்ப சந்தோஷமா, நிம்மதியா இருக்கான்.... சரண் ரொம்ப நல்லவன் ... என்ன ஒன்னு கொஞ்சம் முன் கோபி... நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவி குழந்தைனு வாழனும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா ... அப்படி ஒரு ஐடியல் கப்பல் நீங்க ரெண்டு பேரும் .... இப்ப திடீர்னு அவனை விட்டுட்டு குழந்தையோட போறேன்னு சொன்னா, அவன் வாழ்க்கை மட்டும் இல்ல உன் வாழ்க்கையும் சுக்குநூறா உடைஞ்சி போய்டுமேமா ..."
" நான் அவர் வாழ்க்கைல வந்ததுக்கு அப்புறம் அவர் வேணா சந்தோஷமா, நிம்மதியா இருந்திருக்கலாம் ஆனா நான் சந்தோஷமா நிம்மதியா இருந்ததில்ல… இனிமே நடந்ததை பத்தி பேசி ஒன்னும் ஆகப் போறது இல்ல அண்ணா... எனக்கு அவரோட பணம் காசு எதுவும் வேண்டாம் ... நான் படிச்சிருக்கேன் ... ஏற்கனவே டீச்சரா வேலை பார்த்திருந்ததால அந்த வேலை மறுபடியும் கிடைச்சிடுச்சு .... எனக்கு அதுவே போதும் ... நான் என் குழந்தையை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிடுவேன் ..." என்ற போது அவளது குரல் உடைய,
"லக்ஷ்மி சொன்னா கேளும்மா .... அவனை
விட்டுட்டு நீயும் நல்லா இல்ல, உன்னை பிரிஞ்சு அவனும்
நல்லா இல்ல ... ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்ளோ அன்பு வச்சிருந்தும்
இப்படி பிரிஞ்சி இருந்து உங்களை நீங்களே
வறுத்திக்கிறது நல்லாவா இருக்கு ...." என்றான் ஆதங்கத்தோடு.
" இப்ப கூட நீங்க தானே வந்து பேசுறீங்க உங்க ஃப்ரெண்ட் வந்து பேசலையே ...." என்றவளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவன், உடனே சுதாரித்துக் கொண்டு
" நீ கேச வாபஸ் வாங்கறேன்னு
ஒரு வார்த்தை சொல்லு .... நான் இப்பவே அவனை கூட்டிகிட்டு வரேன்
...." என்றவனை கண்களில் நீர் திரையிட பார்த்தவள், இடவலமாக தலையசைத்து
" வேண்டாம் அண்ணா.... அவருக்கு உண்மையிலேயே என் மேல அன்பும் அக்கறையும் இருந்திருந்தா, நான் வீட்டை விட்டு வந்தது தெரிஞ்சதுமே என்னை
தேடி என் வீட்டுக்கு வந்து இருப்பாரு.... இவ்ளோ
ஆனதுக்கு அப்புறம் கூட நீங்க தான் பேச்சுவார்த்தை நடத்த வந்திருக்கீங்களே ஒழிய, அவர் வரலயே... அதோட அவர்
விவாகரத்துக்கு சம்மதிக்கிறதா, பதில் நோட்டீஸ் வேற அனுப்பி
இருக்காரு... இனிமே பேசறதுக்கு ஒண்ணுமே இல்ல .... அவருக்கு இருக்கிற வசதிக்கும்
பணத்துக்கும் அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சௌக்கியமா இருக்கட்டும் ....
எனக்கு டிவோர்ஸ் கொடுக்க சொல்லிடுங்க அண்ணா.. ப்ளீஸ் ..." என்றவள் மேலும்
கதறி துடித்து அழுதாள்.
அவள் ராம்சரண் மீது வைத்திருந்த
அளவற்ற அன்பையும் பாசத்தையும்
கண்கூடாக கண்டவன் அல்லவா ...
அதோடு அவள் மனம் உவந்து இம்மாதிரி
பேசவில்லை என்பதை புரிந்து கொண்டவனுக்கு அருமையான மனைவி, அழகான குழந்தை, அம்சமான வாழ்க்கை அனைத்தையும் தான் என்ற அகம்பாவத்தால் தன் நண்பன்
கெடுத்துக்கொள்கிறானே என ராம்சரணின் மீது காட்டாற்று வெள்ளமாய்
கோபம் கரை புரண்டோட, அப்போது வழக்கறிஞர் தினேஷ் அங்கு பரபரப்போடு வந்து,
" ஸ்ரீலட்சுமி... அடுத்த கேஸ் நம்மளோடது தாம் மா .... கொஞ்சம் சீக்கிரம் வாங்க ..." என அழைத்துவிட்டு விடை பெற, அவனைப் பின்தொடர லட்சுமி எத்தனிக்கும் போது தான் , உறங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு தாயைப் பார்த்து லேசாக சிணுங்க,
" அம்மு அழாத
... அம்மா கிட்ட வந்துடு ...." என அவள் தன் தாயிடம் இருந்து குழந்தையை
வாங்கும் பொழுது தான், அந்த மழலையை கவனித்தான் வீரா.
அப்படியே நிறம்,
முக ஜாடையில் ராம்சரணின் மறுப்பிரதியாக இருந்த குழந்தையை பார்த்து,
ஒரு கணம் அசந்து தான் போனான்.
ராம்சரண் பாலிவுட் கதாநாயகர்களுக்கே சவால் விடும்
அளவிற்கு சிவந்த நிறம், உயரம் மட்டும் வீராவின்
உயரம் 5.10 அடி , கட்டுமஸ்தான
தேகம் கொண்டவன்.
ஸ்ரீ லக்ஷ்மி ராம்சரணை விட நிறம் சற்று
குறைவு தான் என்றாலும் நம் வீட்டு காலண்டரில்
இருக்கும் மகாலட்சுமியின் முக லாவண்யங்கள் போல், அவ்வளவு லட்சணமாக இருப்பாள்.
ராம் சரணுக்கு அருகில் சற்று நிறம் குறைவாக
தெரிந்தாலும் , இயல்பான மாநிறத்தை காட்டிலும் சற்று
கூடுதலான நிறத்தை கொண்டவள்.
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு
நீண்டதே...
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்....
என்ற வைரமுத்து வரிகளுக்கு ஏற்ப,
இடைத் தாண்டிய அடர்ந்த கூந்தலோடு, செதுக்கி
வைத்த சிற்பம் போல் இருப்பாள்.
ஒரு குழந்தைக்கு தாயான பின்பு கூட,
உடற்பயிற்சி நடை பயிற்சி ஏதுமில்லாமல்,அன்றாட வீட்டு வேலைகளில் தன்னை துருதுருவென ஈடுபடுத்திக்
கொள்ளும் அவளது சுறுசுறுப்பும், நேர்த்தியுமே அவள் அழகிற்கு
ஆபரணமாக அணி சேர்த்திருக்க , ஒருமுறை பார்த்தால்
மறுமுறை பார்க்கத் தூண்டும் அழகியாகவே காட்சி
அளித்தாள்.
" சரி, கிளம்பறோம்ண்ணா...."
என்றவள் குழந்தையை அள்ளிக்கொண்டு நீதிமன்ற சபையை நோக்கி தன் தாயுடன்
வேக நடை இட்டாள்.
அதற்குள் ராம்சரணின் வழக்கறிஞரும் அவனை
ஆயத்தப்படுத்தி இருக்க, பெருத்த ஏமாற்றத்தோடு
திரும்பி வந்த நண்பனை பார்த்து,
" என்னடா சொன்னா ..." என்றான்
ராம்சரண் ஆர்வத்தோடு.
" ம்ம்ம்ம்.... உன்கிட்ட இருந்து
டிவோர்ஸ் வாங்கி கொடுங்கன்னு அழறா... உன்னோட வாழ்ந்த நாட்கள்ல அவ சந்தோஷமா
நிம்மதியா இருந்ததில்லன்னு மனம் நொந்து சொல்றா ...."
" ரொம்ப பொய் சொல்றா டா ... அவங்க
வீட்ட விட அவ என் வீட்ல தான் ரொம்ப வசதியா இருந்தா தெரியுமா ..."
"லூசா டா நீ .... Dont measure the happiness interms of moneyனு உனக்கு தெரியாதா ... அவ என்ன சொல்ல வரானு இன்னுமா
உனக்கு புரியல.... இதிலிருந்து உங்களோட இந்த மூணு வருஷ கல்யாண வாழ்க்கையில நீ அவளை புரிஞ்சுக்க ட்ரையே
பண்ணலன்னு தெரியுது ...."
நண்பனின் பேச்சை காதில் வாங்கிக்
கொள்ளாமலேயே,
" ஏற்கனவே ஒரு தடவை என்னை விட்டு
பிரிஞ்சு போக நினைச்சவ தான் இவ ... இப்படி ஓட்டு போட்டு
ஓட்டு போட்டு எல்லாம் இனிமே என்னால வாழ முடியாது ..."
" அப்ப ஒரேடியா வெட்டிவிட போறியா
..."
"அப்படி விட்டுடுவேனா .. அவ வொர்க்
பண்ணின பழைய ஸ்கூல்லயே தானே இப்பவும் ஒர்க் பண்றதா
சொல்லி இருக்கா ... பாத்துக்கறேன் ... "
சும்மாவே சுழன்று சுழன்று நடனம் ஆடிக் கொண்டிருப்பவனுக்கு, காலில் சலங்கையை கட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தால் விட்டு விடுவானா என்ன.... அப்படியான ஒரு நிலை அவனுக்காக காத்துக் கொண்டிருப்பது அறியாமல், அதை அவன் செவ்வனே பற்றிக் கொள்ளப் போவதும் தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தான்.
" அடேய் , நீ
பேசறது எல்லாம் வச்சு பாத்தா அவசரத்துக்கு ஆன்ட்டி ஹீரோவான மாதிரி தெரியல டா ... ஆண்டாண்டு
காலமா ஆன்டி ஹீரோக்கு அப்பாவாவே இருந்த மாதிரி தெரியுது... என்ன ஒரு டயலாக் டெலிவரி ..." என சிலாகித்தவனிடம்
"நல்ல வேளை வில்லன்னு சொல்லாம
விட்டியே ..."
"சொந்த பொண்டாட்டிய தூக்க போறதால நீ
அனந்த ராமன் இல்ல ஆன்ட்டி ராமன் ....
அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கினா
தான் நீ வில்லன் ராவணன் டோய்...."
"அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் டா
... ஒவ்வொரு விஷயமும் எனக்காக பார்த்து பார்த்து செய்வா....ஒரு சில சந்தர்ப்பங்கள
தவிர மற்ற எல்லா நேரத்துலயும் அவள சிரிச்சு முகத்தோடு தான் பார்த்திருக்கேன் ..." என மீண்டும் மனையாளை நினைத்து உருகிய படி ஹீரோ
மோடுக்கு வந்தவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே
"இப்பதான் புரியுது ... உனக்கு
வியாபாரம் புரிஞ்ச அளவுக்கு உன் பொண்டாட்டியோட மனபாரம் புரியலனு.... ப்ரொபஷனல் லைப்ல சக்சஸ் ஃபுல்லா இருந்தா போதாது தம்பி .... பர்சனல் லைஃப்ல
சக்சஸ் ஃபுல்லா இருக்கணும் அதுதான் உண்மையான சக்சஸ் .... உன்னை சொல்லி தப்பில்ல...
நீ இன்னமும் உன் அம்மா தங்கச்சியையே புரிஞ்சுக்கல ... வெறும் மூணு வருஷம் உன்னோட வாழ்ந்த லட்சுமியை நீ
சரியா புரிஞ்சிருந்திருக்கணும்னு நினைக்கிறது என் முட்டாள் தனம் தான் .... "
நண்பனின் பேச்சிலிருந்து ராம் சரணுக்கு ஏதோ
புரிவது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது ....
முதன் முறையாக ஸ்ரீ லக்ஷ்மி என்னும் புத்தகத்தை சரியாக
படிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்ற, அவளைப் பற்றிய
ஆராய்ச்சியில் அவன் மனம் ஈடுபட தொடங்கிய நிலையில்,
" உன் குழந்தைய பார்த்தேன்.....
அப்படியே அச்சு அசலா உன்னையே உறிச்சிக்கிட்டு இருக்கா ....
இப்படி ஒரு குழந்தையும்,
உன்கிட்ட எதையுமே எதிர்பார்க்காத பொண்டாட்டியையும் வேண்டான்னு
விட்டுட்டு, அப்படி என்னடா நீ சாதனை பண்ண போற...
இனிமே நீ வாழ போற வாழ்க்கை பிளாஸ்டிக் வாழ்க்கையா தான் இருக்க போவுது பாரு
..."
" டேய் நான் என்னமோ டிவோர்ஸ் கேட்ட
மாதிரி நீ பேசற.."
" நீ டிவோர்ஸ் கேட்கல .... ஆனா உன்
நடத்தையால அவளை கேட்க வச்சுட்ட..." என்று
அவர்களுக்கிடையே தர்க்கம் தீவிரமாக நடந்து
கொண்டிருக்கும் போது, ராம்சரணின் வழக்கறிஞர் அவனை
கைபேசியில் அழைத்து விரைவாக நீதிமன்ற சபைக்கு வருமாறு பணித்தார்.
அறிமுக தினம் என்பதால், நீதிமன்ற சபையில் ராம்சரண், ஸ்ரீ லக்ஷ்மி இருவரும் நேருக்கு நேர் நிற்க,
அவர்களது பெயர்களை நீதி அரசர் படித்து
முடித்ததும்,
" எனக்கு டிவோர்ஸ் வேண்டாம் மேம்
..." என்றான் ராம்சரண் வேகமாக.
அதற்குள் ராம்சரணின் வழக்கறிஞர் ,
" சார், இப்ப
நீங்க இதை பேசக்கூடாது ..." என அவசரமாக அவனது
பேச்சுக்கு தடை விதிக்க முயல,
" இப்ப பேசாம எப்ப பேசறது .... " என அவன் கோபத்தில் எகுற
" சார் இன்னைக்கு வெறும் இன்ட்ரொடக்ஷன் தான் ..." என அவர் சன்னமாக மீண்டும் கதைக்க,
" எனக்கு எந்த ஃபார்மாலிட்டிஸ
பத்தியும் அக்கறை இல்லை .... எனக்கு டிவோர்ஸ் வேண்டாம்
...." என குரலை உயர்த்தி அவன் திட்ட வட்டமாக கூற
" மிஸ்டர் ராம்சரண், உங்களுக்கு ஃபார்மாலிட்டிஸ் மேல அக்கறை இல்லாம இருக்கலாம் .... ஆனா இந்த
கோர்ட்டுக்குன்னு சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு .... அதை எல்லாரும் ஃபாலோ
பண்ணி தான் ஆகணும் .... நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீர்களோ அடுத்த ஹியரிங்ல
சொல்லுங்க..” என்று அமர்த்தலாக பேசிய அந்தப் பெண் நீதியரசர்,
ஆவணங்களில் எதையோ கிறுக்கி விட்டு அதனை
குமாஸ்தாவிடம் கொடுத்தார்.
அடுத்த வழக்கின் எண்,
பெயர்கள் அழைக்கப்பட, ராம்சரண் ஸ்ரீ
லட்சுமியை அவரவர் வழக்கறிஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
" சார் ... என்ன சார் .... உங்க
கிளைன்ட் ஜட்ஜ்க்கு முன்னாடி ஏதேதோ உளர்றாரு
.... டிவோர்ஸ் வேணும்னு தானே சொல்லி இருந்தாரு ... இப்ப திடீர்னு
வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம் ..."
" ஆ.... நான் என் பொண்டாட்டியோட சேர்ந்து வாழணும்னு ஆசைப்படறேன்னு அர்த்தம் ... "
என ராம்சரண் இடை புகுந்து கர்ஜிக்க
" அத நீங்க முன்னாடியே சொல்லி
இருக்கணும் ... " என தினேஷ் விவாதத்தில் ஈடுபட
" எப்ப சொன்னா என்ன .... உங்களுக்கு வேண்டியது பணம் தானே .... நான் கொடுக்கிறேன் ... எனக்கு டிவோர்ஸ் வேண்டாம் ...." என தன் மனையாளை உற்று நோக்கி கொண்டே அவன் சொல்ல, கண்களில் நீர் வழிய அவனையே பார்த்துக் கொண்டு அவள் சிலையாய் நின்றாள்.
" சார் அவரை கூட்டிகிட்டு போங்க ...
நீங்க என்ன சொல்லனுமோ அடுத்த ஹியரிங்க்ல சொல்லுங்க ..." என வீராவையும் ராம்சரணின் வழக்கறிஞர் சந்துருவை பார்த்து தினேஷ்
உரைத்து விட்டு, லட்சுமியுடன் பேசிக்
கொண்டே இடத்தை காலி செய்தான்.
" அவ வக்கீல் என்னடா ரொம்ப தான்
துள்றான் .... இவளே டிவோர்ஸ் வேணாம்னாலும் அவன் வாங்கி
கொடுக்காம விடமாட்டான் போல இருக்கே .... மவனே, இன்னொரு தடவை
என் கையில கிடைச்சான் அவன் மூஞ்ச
பேத்துருவேன்..." என்று தன் முழு கை சட்டையை தன் கைமுட்டி வரை மடித்து விட்டபடி அவன்
உறும,
" டேய் சிவில் கேச கிரிமினல் கேஸா மாத்தாம விட மாட்ட போல இருக்கே .... இன்னைக்கு இங்க முஷ்டியை மடக்குறவன், அன்னைக்கு உங்க வீட்ல முஷ்டியை மடக்கி இருந்தா இப்ப இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது ... சரி வா போலாம் ..." என்று அவனை அழைத்துக் கொண்டு சென்ற வீராவிடம் கார் நிறுத்தியிருந்த இடத்தில்
" லக்ஷ்மி .... ஏன்டா இப்படி இளைச்சு
போயிட்டா ...." என்றான் மென்மையாய் கரகரப்பான
குரலில்.
" ம்ம்ம்ம், அரிசி
மூட்டைய உன் வீட்லயே விட்டுட்டு போயிட்டா போல அதான் ..."
" டேய் ரொம்ப தான் நக்கல் பண்ற
.."
" பின்ன என்ன டா .... கொஞ்ச
நேரத்துக்கு முன்னாடி அந்நியனா இருந்த... இப்ப அம்பியா அவள பாத்து பரிதாபப்படற...
உன்னை புரிஞ்சுக்கவே முடியல… அவளை பார்க்கும் போதே தெரியுது
உன்னை விட்டு பிரிஞ்சு போய் அவ சந்தோஷமா இல்லன்னு .... நீயும் பைத்தியக்காரன்
மாதிரி மாறி மாறி உளறிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு திரியற
... எனக்கு என்னவோ காரணம் இல்லாம இப்படி
அதிரடியா முடிவு எடுத்திருக்க மாட்டானு தோணுது ....
உன் வீட்டு ஆளுங்க சொன்னத மட்டும் நம்பி ஒரு முடிவுக்கு வராம லட்சுமி வீட்டுக்கு போய் நீ ஊர்ல இல்லாதப்ப என்ன நடந்ததுன்னு பொறுமையா கேட்டு தெரிஞ்சுக்க... அப்புறம் ஒரு முடிவுக்கு வா ..."
இதே நண்பன் பலமுறை கூறியும்
சிரசேற மறுத்த இதே செய்தி, அல்லிக்கொடியாய்
துவண்டிருந்த மனையாளை சற்று அருகில் கண்டதும், சிறப்பாக சிந்தையை அடைய,
ஓரிரு கணம் யோசித்தவன்
" சரிடா ... ஆனா எனக்கு கொஞ்சம் டைம்
வேணும் .."
" அதான் ஏன்.... ஈகோ ..."
" சும்மா ஈகோ ஈகோனு சொல்லாத...
எனக்கு தெரிஞ்சு நான் எல்லா விதத்துலயும் ரொம்ப சரியா இருந்திருக்கேன் ... சரியாவும் இருக்கேன் ... எனக்கு தண்ணி தம்முனு எந்த பழக்கமும் கிடையாது ... நான் சோசியல் டிரிங்கர் கூட கிடையாது... நல்லா சம்பாதிக்கிறேன் ... அவளையும் என் குழந்தையும் ரொம்ப நல்லா பாத்துக்கிட்டேன்.... பொண்ணுங்க விஷயத்துல நான் எப்படின்னு உனக்கு நல்லாவே தெரியும் ... வழிஞ்சு பேசற பொண்ணுங்க கிட்ட கூட சகஜமா இருந்தாலும் ஒரு அடி தள்ளி நின்னு தான் பேசுவேன் அதுவும் லஷ்மி என் வாழ்க்கையில வந்ததுக்கப்புறம் என் மனசு கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஆயிடுச்சு .... யாரையும் இயல்பா கூட பார்க்க பிடிக்கல .... கோயம்புத்தூர் இல்லாம வேற எங்க பிசினஸ் மீட் இருந்தாலும், எப்படா வீட்டுக்கு பிளைட் ஏறுவோம்னு இருக்கும் .... இவ்ளோ சரியா இருந்த என்னை அவ புரிஞ்சுக்காம போனதுதான் எனக்கு கோவமே ....
நான் அவள கடிஞ்சி ஒரு வார்த்தை பேசினது கிடையாது .... அஃப்கோர்ஸ், அன்னைக்கு நடந்த பெரிய பிரச்சனைல அவள அடிச்சிட்டேன் .... ஒத்துக்குறேன் ... எங்க மூணு வருஷ கல்யாண வாழ்க்கைல நான் கொஞ்சம் தடம் புரண்டது அன்னைக்கு மட்டும்தான் ... அதுக்கப்புறம் ஒரு வாரம் நாங்க ரெண்டு பேரும் சரியாவே பேசிக்கல... மற்றபடி அவளும் இயல்பா தான் இருந்தா ..." என்றவனின் சிந்தையில் அந்த வாரத்தில் நடந்த சில இனிமையான நிகழ்வுகள் படக் காட்சியாய் மின்னல் வேகத்தில் விரிந்து மறைய, அதனை உள்ளுக்குள் அசை போட்டுப் பார்த்து அவன் ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில்,
"அடேய் நீ உன் பக்கத்து நியாயத்தை
மட்டுமே பேசிக்கிட்டு இருக்க... உன் வீட்டு ஆளுங்க அவளுக்கு கொடுத்த கொடைச்சல மறந்துட்ட... அதுக்கு நீ
சரியா ரியாக்ட் பண்ணாம போனது தான்
பிரச்சனையோட உச்சகட்டமே ... அதுதான் அவளை இந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னு
தோணுது ... மற்றபடி நீங்க ரெண்டு பேரும் ஐடியல் கப்பல் தான்... உன்னை பார்த்து அவ அழறா... அவள பாத்து நீ துடிக்கிற
... இதையெல்லாம் பார்த்துக்கிட்டு தானே இருந்தேன் ...
சரி, அடுத்த
மாசம் ஹியரிங் வரைக்கும் உனக்கு டைம் இருக்கு ... அதுக்கு முன்னாடி லட்சுமியை பார்த்து பேசிடு..." என்றவன் உதடுகள் குவித்து உஃப் என்று
நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டு
"நான் நாளன்னைக்கு மெல்போர்ன் கிளம்பறேன் .... அங்க எனக்கு ஒரு வாரம் பிசினஸ் மீட் இருக்கு .. அங்கிருந்து சிட்னிக்கு போய் கிளையன்ட் மீட்டிங் முடிச்சுட்டு, அந்த பெண்ணையும் பார்த்துட்டு, ஊர் வந்து சேர மூணு வாரமாவது ஆகும் ... அதுக்குள்ள ஒரு நல்ல முடிவு எடு சரண்.... ப்ளீஸ் ..." என்றவன்
" ஏய் கேக்க மறந்தே போயிட்டேன்... உங்க அப்பா எப்ப வராரு ... அவருக்கு எல்லாம் தெரியுமா ..." என்றான் ஆர்வமாக.
தெரியாது என்பது போல் இடவலமாக தலையசைத்த
ராம்சரண்,
" நடந்தது மட்டும் அவருக்கு தெரிய வந்துச்சு .... என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவாரு... பிசினஸ் மீட்டிங்க்காக ஏசியன் டூர் போயிருக்காரு.... ஏற்கனவே ஹாட் பேஷன்ட் ... அதனால எதையும் சொல்லல டா... "
" அவரு வந்துட்டா ...எல்லா
பிரச்சனையும் சால்வ்வாயிடும்னு தோணுது ..." என்றான்
நம்பிக்கையாய்.
லட்சுமியும் அவளது தாய் ருக்மணியும்
ஆட்டோவில் ஏறி செல்வதை பார்த்த பிறகு, இருவரும்
அங்கிருந்து கிளம்பினர்.
வீரா தன் காரை ராம்சரணின் இல்லத்திற்கு
அருகே நிறுத்திவிட்டு வந்திருந்ததால் அதனை
எடுக்க அவன் ராம் சரணோடு பயணிக்கும் போது கார் நடு வழியில்
பழுதடைய, அரை மணி நேரம் போராடியும் தீர்வு காண முடியவில்லை
என்கின்ற நிலையில் தெரிந்த மெக்கானிக்கை அழைத்து வண்டியை ஒப்படைத்துவிட்டு இருவரும் ஆட்டோவில் வீடு திரும்பினார்.
" உள்ள வந்துட்டு போயேன் டா..."
" இல்லடா நேரமாச்சு இன்னொரு நாள்
வரேன்..." என்றவன் ராம் சரணின் இல்லத்திற்கு சற்று அருகில் நிறுத்தி இருந்த
தன் காரை எடுத்துக்கொண்டு பஞ்சாய் பறந்து விட, மனம்
முழுவதும் ரணமாய் மனையாளின் நினைவுகள் வலம் வர, மிகுந்த
சோர்வோடு வீட்டின் சிறிய இரும்பு கேட்டை திறந்து
கொண்டு அவன் போர்டிகோவை அடையும் பொழுது, தொலைக்காட்சி தன்
வேலையை சன்னமாக செய்து கொண்டிருக்க, அவனது தாய்
கற்பகம் சந்தோஷ மிகுதியில் உச்சஸ்தாழியில் அவன் தங்கை அருணாவோடு அலைபேசியில்
பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.
" நாம ஒண்ணுமே பண்ண வேணாம் அருணா....
கூடிய சீக்கிரம் எல்லாமே நல்லபடியா முடிஞ்சிடும்னு தோணுது.." என்று பெருமிதத்தோடு அவர் கூறிக் கொண்டிருப்பதை கேட்டு ..ஒரு கணம் அவன் அப்படியே உறைந்து நிற்க,
ஏதோ நிழல் ஆடுவது போல், உணர்ந்து சட்டென்று
திரும்பிப் பார்த்தவர் மைந்தனை அங்கு எதிர்
பார்க்காததால் அதிர்ச்சியில் சிலையாகிப் போனார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்தவர்,
" எப்பப்பா வந்த.... கார் வந்த
சத்தமே கேட்கலையே..”
" கார் ரிப்பேர்
ஆயிடுச்சு மெக்கானிக் கிட்ட விட்டுட்டு வந்து இருக்கேன் ..." என்றான்
அழுத்தமாக.
" ஆமா , போன
வேலை என்ன ஆச்சு ... கூடிய சீக்கிரம் டிவோர்ஸ் கிடைச்சுடும் இல்ல ..." என்று
கேட்டவரின் கண்களில் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பும் ஆர்வமும் தெரிய, அதனை உள்வாங்கிக் கொண்டே,
" ம்ம்ம்ம்...." என்றான்
அமர்த்தலாக.
"அப்பாடா .... ரொம்ப இழுத்தடிக்குமோனு
பயந்தே போயிட்டேன் ..." என்றவரின் கண்ணில் மருந்த அளவிற்கு கூட
கவலையோ சோகமோ இல்லை மாறாக
எதையோ சாதித்த உணர்வு வியாபித்திருக்க,
"ஆனா, எனக்கு
என் குழந்தை வேணும்னு வக்கீல் கிட்ட சொல்லி இருக்கேன் .... அவரும் குழந்தையை அவகிட்ட
இருந்து வாங்கி தரேன்னு சொல்லி இருக்கிறாரு..."
என்றான் தாயை ஆழம் பார்க்க.
மின்னல் வேகத்தில் அவரது முகம் நிறம் மாற, எங்கு குழந்தையை தன் தலையில் கட்டி விடுவானோ என்று அவர் அஞ்சிவது
அப்பட்டமாக அதில் தெரிய, சுதாரித்தவர் குரலில்
மென்மையைக் கொண்டு வந்து
"அது வந்து ப்பா.... குழந்தை அதோட
அம்மா கிட்ட வளர்ந்தா தான் நல்லபடியா வளரும் ... பெத்த தாயை போல வேறு யாராலும்
பொறுமையா தன்மையா பார்த்துக்க முடியாதுப்பா...."
இப்பொழுது அவனது முகம் கோபத்தில் லேசாக
செம்மையுற
" என் குழந்தையும் அவகிட்ட
போயிடுச்சுன்னா அப்புறம் எனக்குன்னு யார் இருக்கா ..."
" ஏன் நான் இல்லையா... உன் அப்பா
இல்லையா, உன் தங்கச்சி தான் இல்லையா .... அவளோட ரெண்டு
பசங்க, அதுவும் ரெட்ட குழந்தைங்க மாமா மாமான்னு
உன்கிட்ட எவ்ளோ ஆசையா இருக்குதுங்க .... இதை விட வாழ்க்கையில வேற என்னப்பா வேணும்
... குடும்பத்துக்கு அடக்கமா இருப்பானு நினைச்சு தான் ரொம்ப சாதாரணமான
குடும்பத்துல இருந்து பொண்ணு எடுத்தோம் ... அவ இப்படி திடீர்னு டைவர்ஸ் கேப்பானு
கனாவா கண்டோம்.... " என்றவர் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு
"என்ன பண்றது எல்லாம் உன் தலைவிதி
.... அப்பவே சொன்னான் ஜோசியக்காரன், உங்க புள்ள
ஜாதகத்துல களத்திர தோஷம் இருக்குனு.... தோ இப்ப
பளிச்சிடுச்சே..." என்றவரை ஆராய்ச்சி பார்வை
பார்த்தவன்,
"தங்கச்சி குழந்தை தங்கச்சி குழந்தை
தாம்மா .... என் குழந்தை ஆயிடும்மா... அதனால டிவோர்ஸ் கிடைச்சதும் இன்னொரு
கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..." என்ற அணுகுண்டை போட்டுவிட்டு
அமைதி காத்தான்.
சற்றும் எதிர்பார்க்காத இந்த பேச்சில்
தடுமாறியவர், கண நேரத்தில் சுதாரித்துக் கொண்டு
"இப்ப எல்லாம் பொண்ணு கிடைக்கிறதே
ரொம்ப கஷ்டமா இருக்கு.... அதுவும் இரண்டாம் கல்யாணம்னா சொல்லவே வேணாம்
பொண்ணு வீட்டுக்காரங்க 1008 கேள்வி
கேக்குறாங்க ... அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லி கல்யாணம் பண்றதுக்குள்ள போதும்
போதும்னு ஆயிடும் .... அதனால முதல்ல டிவோர்ஸ் கிடைக்கட்டும் ... அப்புறம் அடுத்த
கல்யாணத்தை பத்தி பேசலாம் ..." என்று ஒரு வித படபடப்போடு முடித்தவர், அந்த இடத்தை விட்டு கிளம்பினால் போதும் என்ற ரீதியில் தன் அறைக்குள்
சென்று மறைந்தார்.
மனையாள் சொன்னபோது புரியாதது ,
உயிர் நண்பன் சொன்ன போது புரியாதது எல்லாம்
சேர்ந்து தற்போது லேசாக புரிய தொடங்க,
மிகுந்த மன அழுத்தத்தோடு மாடியில் இருக்கும் தன் படுக்கை அறைக்கு
வந்தவனுக்கு தன் மனவாட்டியை பற்றிய நினைவுகள் அலைகழிக்க,
துடித்து துவண்டவன் அப்படியே கட்டிலில் சரிந்தான்.
ஸ்ரீ- ராமம் வருவார்கள் .....
Comments
Post a Comment