அத்தியாயம் 2
ஓரிரு கணத்தில் குயில் சப்தத்துடன்
குறுஞ்செய்தி வர, அதில் அவன் தாய்
அகல்யா, அனுப்பியிருந்த கைபேசி எண்ணிற்கு அழைப்பு
விடுத்தான்.
ஓரிரு அழைப்பு ஒலியின் ரீங்காரத்திற்கு
பிறகு
கைபேசியின் இணைப்பில் வந்து
" ஹலோ..." என்றார் அம்மையப்பன்.
அவர் தான் அவனுக்கு பார்த்திருக்கும் பெண்
ஸ்ரீப்ரியாவின் தந்தை.
தன்னை எப்படி அறிமுகப்படுத்திக்
கொள்வது என தெரியாமல், முதலில் தடுமாறியவன், கண்ணிமைக்கும்
நேரத்தில் சுதாரித்துக் கொண்டு,
" நான் அதிவீர ராம பாண்டியன் பேசறேன்
...." என முடித்தது தான் தாமதம்,
" தம்பி... நீங்களா... சொகமா இருக்கீங்களா ... நான் நெலம் கிரயம் பண்றதுக்காக ரெண்டு பேத்து
கிட்ட பேசி வச்சி இருந்தேன் ... அவுகளோனு நெனச்சிட்டேன்
.... வீட்ல எல்லாரும் சௌக்கியங்களா…." என்று வாஞ்சையாக
விசாரித்தது போல் இருந்தாலும், குரலில் பிரதிபலித்த
ஒரு வித உறுதி அவர் 'கறார் அசாமி'
என்பதை சொல்லாமல் சொல்லியது.
"ம்ம்ம்ம்... நல்லா இருக்கேங்க...
வீட்லயும் எல்லாரும் நல்லா இருக்காங்க .... " என அவன் முடிப்பதற்குள் மீண்டும் முந்திக்கொண்டு
" என்ன சமாசாரம்... திடீர்னு
போன் செய்து இருக்கீங்க ...." என்றார் ஆர்வத்துடன்.
" உங்க பொண்ணு ஸ்ரீப்ரியா
ஆஸ்திரேலியால எங்க இருக்காங்க... எந்த ப்ராஜெக்ட்ல வேலை செய்றாங்க….." என்றான் நேரடியாக.
" சிட்னில இருக்கா .... ஏதோ பேங்க்
ப்ரொஜெக்ட்ல வேலை செய்யறதா சொன்னா .... " என அவர் இழுக்க
" அவங்க போன் நம்பர் கொடுக்கறீங்களா
...." என்றான் நாயகன் அதிரடியாக.
முந்தைய தலைமுறையின் பழக்கவழக்கங்களில்
மூழ்கி முத்து எடுத்து,
ஆதிக்கத்தையே ஆளுமையாக எண்ணி செயல்படும்,
அம்மையப்பன் போன்றோரிடம்
இப்படி நேரடியாக கேட்பது தவறு என
அறியாமல், அவன் அவரது பதிலுக்காக காத்திருக்க, ஓரிரு கணம் அமைதி காத்தவர்,
" தம்பி, அப்படி பொட்ட புள்ளைங்க போன் நம்பரை பரிசம் போடறதுக்கு முன்னாடி கொடுக்க மாட்டாங்கப்பா ... ஏற்கனவே உங்கள பத்தின டீடைல் எல்லாம்
அனுப்பிட்டேன் ... என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டா என் பொண்ணு .... நான் எது
சொன்னாலும் கேட்டுகிடு வா .... நான் சொன்ன இடத்துல தான் கழுத்த நீட்டுவா நீங்க
கவலைப்படாதீங்க ..."
அதுதான் இங்க பிரச்சனையே ... என மனதுக்குள்
அவன் புலம்பி கொண்டிருக்க,
"அடுத்த மாசம் ஆஸ்திரேலியால இருந்து
வர போறா.... நீங்க குடும்பத்தோட வந்து பொண்ணு பாருங்க .... ரெண்டு
குடும்பத்துக்கும் ஒத்து போய் பேச்சுவார்த்த
முடிஞ்சிடுசின்னா பரிசம் போட்டதுக்கு பொறவு நம்பர்
தாரேன் .... பேசுங்க ..." என்று தவிர்த்தார் நாசூக்காக.
உடனே கண நேரத்தில் அந்த மனிதர் வாழும்
வாழ்க்கை பின்னணியை புரிந்து கொண்டு
தன்னைத் தானே மானசீகமாக கொட்டி கொண்டவன்
" சரிங்க ..." என்று நல்ல
பிள்ளை போல் அழைப்பை துண்டித்தான்.
" லூசாடா நீ, நம்ம கம்பெனில தான் வேலை செய்றா... கம்பெனி
சைட்ல தேடினாலே அவளை பத்தின டீடெயில்ஸ எடுத்திடலாம் ... இவ்ளோ ஏன் Linked in , லொட்டு லொசுக்குன்னு ஏகப்பட்டது
இருக்கு... இதை எல்லாத்தையும் விட்டுட்டு எதுக்கு
தேவையில்லாம அவங்க அப்பா கிட்ட அவ போன் நம்பரை கேட்ட.." என்றான் ராம் சரண் அவர்களுக்கிடையேயான கைபேசி உரையாடலை
அறிந்தவனாய்.
" சில இடத்துல நேர்மையா இருக்கக்
கூடாதுன்னு இப்பதான் புரியுது... நம்ப கம்பெனில ,
ஆஸ்திரேலியால அதுவும் சிட்னில ஒரு
ஸ்ரீப்ரியா அம்மையப்பனை என்னால கண்டுபிடிக்க முடியாதா…. எல்லாம்
ப்ராப்பர் சேனல்ல போகணும்னு தான் அவங்க அப்பா கிட்ட போன் நம்பரை கேட்டேன் ....
அவரு என்னவோ நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படறேனு நினைச்சுகிட்டு, என்னென்னமோ பேசறாரு
..."
" டேய் கல்யாணம் வேணாம்னு
சொல்றதுக்கு எதுக்குடா ப்ராப்பர் சேனல்... இம்ப்ராப்பர் சேனல் ... அவ அபிஷியல் மெயில் ஐடிக்கு ஒரு
மெயில் தட்டி விட்டா முடிஞ்சது ..." என்ற ராம்சரணின் கேள்விக்கு
அதிவீர ராம
பாண்டியன் பதில் சொல்ல முடியாமல் திணறினான் என்பதை விட அவனிடம் பதில் இல்லை என்பது
தான் பொருத்தமாக இருக்கும்.
சற்றுமுன் அவன் ஆற்றிய
செயல் அபத்தமாக அப்போது தான்
தோன்ற ஆரம்பிக்க, தன் எண்ண ஓட்டத்தை
அறிய முடியாமல், தவித்துப் போனான்.
எண்ணம் சரியாக இருந்தால்
செயல் சரியாக இருக்கும். அவன் மன ஓட்டம்
முற்றிலும் குழப்பமாக இருந்ததால் , அவனது செயல்கள்
முன்னுக்குப் பின் முரணாக இருக்க, அந்தப் பெண்ணை தன்
வாழ்க்கைக்குள் கொண்டு வரலாமா வேண்டாமா என முடிவெடுக்க
முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
நண்பனிடம் பதில் வரவில்லை என்றதும்,
" டேய் நீ பண்றது எனக்கு சுத்தமா
புரியல .... நீ அந்த பொண்ண கல்யாணம்
பண்ண போறதில்ல ... பின்ன அவ போன் நம்பர் உனக்கு எதுக்கு டா..." என தெளிவாக
ராம்சரண் மீண்டும் கேள்வி எழுப்ப
" புரியாம பேசாத சரண்...
என் அம்மா அப்பா இருக்கிற வேகத்துல, பொண்ணு
பாக்க போகும் போதே அந்த பொண்ண புடிச்சிருச்சின்னா அப்பவே என்னை தாலி கட்ட
சொன்னாலும் சொல்லிடுவாங்க… நீங்க எல்லாம் உங்க கல்யாண
வாழ்க்கையில படறதை பார்த்து, கல்யாணம்னாலே கடுப்பா
இருக்குது டா ... அதான் பொண்ணு பாக்கறதுக்கு
முன்னாடியே, எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லனு
அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டா... அதுக்கு மேல இந்த பொண்ணு பார்க்கிற
ட்ராமா எல்லாம் நடக்காது இல்ல... அதான்..."
" டேய், உனக்கு
கூறு இருக்கா... இல்லையா... நீ அவங்க அப்பா கிட்டயே
போன் நம்பர் வாங்கி அந்த பொண்ணு கிட்ட நோ சொல்லி
இருந்தா , நாளைக்கு அவங்க அப்பாக்கு மட்டும் இல்ல உங்க அப்பா
அம்மாக்கு தெரிய வராதா ..."
" எனக்கு அத பத்தி கவலை இல்லை
... எனக்கு மேரேஜ்ங்கிற இன்ஸ்டிடியூஷன் மேல நம்பிக்கை இல்லனு அவ கிட்ட சொல்லணும் அதான்... ஒரு ஆம்பள அப்படி
சொன்னதுக்கு அப்புறம் எந்த பெண்ணாவது
கல்யாணத்துக்கு சம்மதிப்பாளா... அதோட பெண்ணை நேர்ல பாக்கும் போது என் அம்மாவுக்கு
புடிச்சிருச்சின்னு வையி, அப்புறம்
கடவுளால கூட என் கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடியாது டோய்...
அதுக்காகத்தான் இந்த முன்னேற்பாடு ... இன்னும் சரியா சொல்லனும்னா, என் அப்பா அம்மாவை என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது .... முடியல ....
அதனாலதான் அவகிட்ட சொல்லி ஸ்டாப் பண்ண பார்க்கிறேன் ..."
" தெரியாம தான் கேட்கறேன்... ஊர்ல
எவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டு குப்பை கொட்டலயா ...
உன்னை சுத்தி இருக்கிற நாங்க ரெண்டு பேர்
மட்டுமே உலகம் இல்லடா ... எங்களுக்கு கல்யாண
வாழ்க்கையை வாழ தெரியல... இல்ல எங்களுக்கு சரியான
கல்யாண வாழ்க்கை அமையல .... அதே மாதிரி எல்லாருக்கும்
இருந்திடுமா என்ன ... அதோட இப்ப பொண்ணு கிடைக்கிறதே ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு டா ... வயசு வேற உனக்கு 30 ஆக
போகுது.. பேசாம கல்யாணம் பண்ணிக்கோ ..."
" வெறும் ஃபோட்டோவை மட்டும் பார்த்து
எப்படிடா கல்யாணத்தை முடிவு பண்றது ...."
"சரி... வேற எத பாத்து முடிவு
பண்ணனும்னு சொல்ற.... அதை சொல்லு .... உன் அண்ணன் நல்லா பாத்து, பேசி, பழகி, லவ் பண்ணித்தானே
மேரேஜ் பண்ணிக்கிட்டான்... நான் அரேஞ்ச்டு மேரேஜ்
பண்ணிக்கிட்டேன் ... நாங்க ரெண்டு பேருமே கல்யாண வாழ்க்கைல கஷ்டப்பட்டுக்கிட்டு
தானே இருக்கோம்.... அதனால லவ் மேரேஜ்ன்னாலும்
அரேஞ்ச்டு மேரேஜ்ன்னாலும் நம்ம தலை விதிப்படிதான் நடக்கும் ....
பேசாம அந்த
பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் கோதால குதி... நாங்க மட்டும்
கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம் நீ மட்டும் சந்தோஷமா இருந்தா எப்படி
.... சரி... அந்த பொண்ணு போட்டோவ
பாத்தியா ..."
" பார்த்தேன் பார்த்தேன் ...."
என்றான் அதிவீரப்பாண்டியன் அசுவாரசியமாக .
" ஏன் பொண்ணு பிடிக்கலையா... நல்லா இல்லையா எங்க போட்டோவ காட்டு ..."
தன் whatsappல்
இருந்த, ஸ்ரீப்ரியாவின் புகைப்படத்தை ராம்சரணிடம் அவன் பகிர,
" அடேய்.... இந்த பொண்ணுக்கு என்னடா
குறைச்சல்.. பொண்ணு நல்லாவே இருக்கா ...."
" ஆமா.... ஊர் பட்ட மேக்கப் போட்டு,
இப்படி தலை நிறைய மல்லிப்பூ வச்சு, தழைய தழைய
புடவை கட்டி பேங்க்ல லாக்கர்ல இருக்குற நகையை
மொத்தத்தையும் அள்ளிப்போட்டு போட்டோ எடுத்தா சுமாரான மூஞ்சி கூட சூப்பரா தான் தெரியும் ... ஏதோ படத்துல சந்தானம் சொல்ற மாதிரி நைட்டில
பாத்தா தான் இவங்களோட ஒரிஜினல் மூஞ்சே தெரியும் ..."
" அப்ப, நைட்டி
போட்ட ஒரு போட்டோ அனுப்ப சொல்லலாமா ..."
" என்ன நக்கலா ..."
" ம்ம்.... விக்கல் ... சரி இப்ப
என்ன பண்றதா உத்தேசம்..”
" நீ சொல்ற மாதிரி அவளை பத்தின
டீடெயில்ஸ நம்ப கம்பெனி சைட்ல எடுத்துட்டு அவள பாக்க
சிட்னி போலாம்னு இருக்கேன் ...."
" அடேய்... உனக்கு கிறுக்கு
புடிச்சிடுச்சா.... கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கு மெயில்லயே சொல்லலாமே டா... இல்ல
போன்ல கூட சொல்லலாம்.. எதுக்காக ஆஸ்திரேலியா
போற ...” என்றவன் ஓரிரு கண அமைதிக்குப் பிறகு
"உனக்கு வேற ஏதாவது ஐடியா இருக்கா
..." என்றான் யோசனையாக.
" ச்சே, ச்சே...
என் முடிவு நோ தான் .... அதுல எந்த மாற்றமும் இல்லை .... 200 மில்லியன் KPMA ப்ராஜெக்ட் , 100 மில்லியன் ரெண்டு அவுட்சோர்சிங் ப்ராஜெக்ட்டுக்கு
ஆஸ்திரேலியால பேஃபோ(BAFO- best and final offer) பிசினஸ் மீட் இருக்கு அதுக்கு
நான் போய் ஆகணும் ....
" அந்தக் கிளைன்ட்
Melbourne இல்ல..."
" ஆமா Melbourne தான் ... ஆனாலும் Sydneyல West pac bank ப்ராஜெக்டோட RFP(Request for proposal) அப்ரூவ்
ஆகியிருக்கு ... சோ, அங்கேயும் ஒரு கிளைன்ட் விசிட்
இருக்கு... அதான் அவளையும் அப்படியே பார்த்துட்டு நோ சொல்லிட்டு வரலாம்னு...” என்றவனுக்கு
தெரியாது அவன் ஆஸ்திரேலியா போவதற்கு முன்பே அந்தர் பல்டி அடிக்க போவது .
" ஆர் யூ சீரியஸ்... எனக்கு என்னமோ
நீ பண்றது எதுவுமே சரியா படல ..."
" எஸ் மேன் ... இதுவரைக்கும் இந்த அதிவீரராம பாண்டியன் சொன்னத தான் செஞ்சிருக்கான்
செய்ததை தான் சொல்லி இருக்கான் .... உனக்கு நம்பிக்கை இல்லன்னா உன் தலையில அடிச்சு
சத்தியம் பண்ணட்டுமா ..."
" வேண்டா ... நான் அல்ப ஆயுஸ்ல போக தயாரா இல்ல..." என்றான் ராம்சரண் லேசாக
புன்னகைத்து.
இவர்கள் இருவரும் பணியாற்றும் அந்த பெரிய
நிறுவனத்தில் அதிவீர ராம பாண்டியன் என்ற அவனது அசல் நாமகரணத்தை விட AVR என்றால் தான் பிரபல்யம்.
தரம் வாய்ந்த பல நிறுவனங்களின் வரைவு
திட்டங்களை(Projects) பெறுவதற்கு, பல தகவல் தொடர்பு மென் நிறுவனங்களுக்கிடையே(IT) கடுமையான
போட்டிகள் நிலவும் இக்காலக் கட்டத்தில் வரைவு
திட்டத்திற்கு(project) பொதுவாக
குறிப்பிடப்படும் தொகையைக் காட்டிலும் சற்று அதிகமான தொகைக்கு கிளையன்ட் என்னும்
வாடிக்கையாளர்களிடம் அம்சமாகப் பேசி, திட்டத்தை விவரித்து
அழகாகப் பெற்றுவிடுவான்.
மொழி ஆளுமை மட்டுமல்ல ,
அவன் பயன்படுத்தும் வார்த்தையின் நேர்த்தியும், எதிராளியை அவன் பேச்சுக்கு தன்னிச்சையாக செவி
சாய்க்க வைத்துவிடும் ....
மனிதர்களுக்கு ஏற்ப தட்டிக்
கொடுத்தும் வேலை வாங்குவான், தட்டி அடித்தும் வேலை
வாங்குவான் ...
அவன் தலைமையிலான
குழு தலையிட்ட எந்த ஒரு வரைவு திட்டமும் இதுவரையில் அவனது நிறுவனத்தை விட்டு கை நழுவி சென்றதில்லை என்பதால், நிறுவன தலைமை இடம் இருந்தும் அவனுக்கு ஏக போக ஆதரவு
இருந்தது.
ஆக மொத்தம் அதிவீர ராம பாண்டியன் அதி
புத்திசாலி மட்டுமல்ல, அதி
பராக்கிரமசாலியும் கூட.
மாநிறம், ஆறடிக்கு
இரண்டு இன்ச் குறைவான உயரம், ஆளுமையும் கம்பீரமும் ததும்பும்
உடல் மொழி, திடகாத்திரமான உடலுக்கு ஏற்ப திடமான குரல்,
எவரையும் புன்னகையுடன் அணுகும் வசீகரமான முகபாவம் .... மொத்தத்தில் ஒருமுறை கண்டால்
மறுமுறை காணப்பிடிக்கும்
நேர்த்தியான தோற்றம் படைத்தவன்.
அவனுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நட்பு
பட்டங்கள் என்றாலும், அனைவருமே ஆத்ம
நண்பர்கள் தான். அதில் ராம் சரணை தனது உடன்பிறவா
சகோதரனாகவே கருதி நட்பு பாராட்டுவான். அவன் இருக்கும்
இடத்தில் சிரிப்பு சத்தத்திற்கு பஞ்சம் இருக்காது.
வீட்டிலும் வெளியிலும் ஒரே மாதிரியான
செயல்பாடுகளை கையாளுவான். குடும்பத்தின் மீது
சற்று பற்றுதல் அதிகம். குறிப்பாக தாய் மீது ஒரு படி
கூடுதல் என கூட சொல்லலாம்.
அவனது தந்தை பொன்னம்பலம்,
ஒரு பெரிய நிறுவனத்தில் பெரும் பதவியில் பணிபுரிந்து பதவி ஓய்வு
பெற்றவர். தாய் அகல்யா இல்லத்தரசி.
தந்தை பொன்னம்பலத்தை விட
தாய் அகல்யாவிற்கு சற்று கோபம் அதிகம்
வரும் , ஆனால் அதனை
அவ்வளவு எளிதாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். சில சமயங்களில் அவரையும் மீறி வெள்ளந்தி தனமும் வெளிப்படும், பார்ப்பதற்கு
எளிமையான தோற்றம் கொண்டவர் என்றாலும்,
மொத்த குடும்பமும் அவரது ஆளுமைக்கு கீழ்
தான்.
ஒரு அண்ணன் சத்யன். அதிவீர ராம பாண்டியனை போலவே பட்டம்
பெற்று சிங்கப்பூரில் பெரும் நிறுவனத்தில் பெரும் பதவியில் பணியில் இருக்கிறான்.
சத்யன், கல்லூரியில்
படித்த காலத்தில் உடன் படித்த பெண்ணுடன் அவனுக்கு
காதல் ஏற்பட்டது. படிப்பை திறம்பட முடித்து மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பெற்றதும், தன் காதலை அவன் வீட்டில் பகிர, அவன் காதலித்த
பெண் வேறு சமுதாயத்தை சார்ந்தவள் என்பதால் அவன் தாய் தந்தை இருவரும் பலத்த எதிர்ப்பு
தெரிவித்தனர்.
பெண் வீட்டாரருக்கு,
சத்யனை மிகவும் பிடித்து விட, அவர்கள்
திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்ட,
கிட்டத்தட்ட ஓராண்டுகள் போராடி,
தன் தாய் தந்தையின் சம்மதத்தை
அரைகுறையாக பெற்றதற்குப் பிறகு சத்யனின் திருமணம் அழகாக நடந்தேறியது.
என்னதான் சத்யனின் திருமணம் ஆடம்பரமாக
நடந்தேறி இருந்தாலும் மாற்று சமுதாயத்தில்
அவன் மணம் முடித்தது பெற்றவர்களுக்கு
சில மனத்தாங்கல்களை கொடுக்கவே செய்திருந்தது.
அதோடு உடன் பிறந்த ஒரே ஒரு
தங்கையை பற்றி கவலைப்படாமல், அவன் சுயநலமாக
நடந்து கொண்டதாக அவர்கள் கருத, பல சமயங்களில்
அது வேறு மாதிரியாக வெளிப்பட்டு சில பல மன சுணக்கங்களை குடும்பத்தில்
ஏற்படுத்தவும் செய்தது.
சிறப்பாக நடத்தி வரும் தொழிலதிபர்
செந்திலுக்கும்
வெகு சிறப்பாக திருமணம் நடந்து
முடிந்திருந்த நிலையில் தான், அதிவீரராம பாண்டியனின்
தாய் அகல்யா , அதிதீவிரமாக அவனது
ஜாதகத்தை கையில் எடுத்து பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு
செய்துவிட, தற்போது அதனை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் விழி
பிதுங்கியபடி தன் நண்பன் ராம்சரணுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது,
" சார் ...." என்று பரபரப்பாக
அழைத்தபடி ராம்சரணின் வழக்கறிஞர் அவர்களை நோக்கி
வந்தார்.
" என்ன சார் ..." என்று
எதிர்பார்ப்போடு
சரண் வினவ,
" அவங்க சைடுல மியூச்சுவலுக்கு
ஒத்துக்கிட்டாங்க.. அலிமணி(Alimony) கூட
வேண்டாம்னு சொல்லிட்டாங்க .... சோ,
கூடிய சீக்கிரம் இழுத்தடிக்காம இந்த
கேஸ் முடிஞ்சிடும் சார் .... " என புன்னகையோடு அவர் தெரிவித்துக் கொண்டிருக்க, திருடனுக்கு
தேள் கொட்டியது போன்ற உணர்வில் துடித்துப் போனவன்
" ஒரு நிமிஷம் பேசிட்டு சொல்றேன்
..." என வழக்கறிஞரை அனுப்பிவிட்டு,
" டேய், என்னடா
நெனச்சுக்கிட்டு இருக்கா இவ .... ஏதோ கோவத்துல கோர்ட் வரைக்கும் வந்திருக்கா ...
எப்படியாவது சமாதானப்படுத்திடலாம்னு நெனச்சா, இப்படி பண்றா
..." என்றான் அதிர்ச்சியாய்.
" உனக்கு இதெல்லாம் வேணும்டா ... லட்சுமி
டிவோர்ஸ் வேணும்னு கேட்டு நோட்டீஸ் அனுப்பின உடனேயே
அவளை பார்த்து பேசி இருந்தா, பிரச்சனையை
முடிச்சிருக்கலாம் ... ஆனா உன்கிட்ட தான் திமிரு,
அகம்பாவம் ஈகோ எல்லாம் கிலோ கணக்குல கொட்டி கிடக்குதே .... அதனால
நானும் டிவோர்ஸ்க்கு சம்மதிக்கிறேனு உன் வக்கீல் மூலமா
நோட்டீஸ் அனுப்பின...அதனோட விளைவு தான் இது நல்லா
அனுபவி... ஒன்னு சொல்றேன் மனசுல வச்சுக்க...
லட்சுமி மாதிரி
பொண்ணுங்க எல்லாம் Endangered species(அறிய வகை உயிரினம் ) வகைல
சேர்க்க வேண்டியவங்க... உனக்கு அவளோட அருமை தெரியல ... அவ உன்னை டிவோர்ஸ்
பண்ணிட்டு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்
அவனோட வாழ்க்கை சந்தோஷமா தான் இருக்......." என வீரா
முடிப்பதற்கு முன்பே, அவனது சட்டையை கொத்தாக பற்றி
இருந்தான் ராம் சரண்.
" இன்னும் ஒரு வார்த்தை பேசின...
ஃப்ரெண்ட்னு பாக்க மாட்டேன் அடிச்சு பொளந்துருவேன்
..." என்றவனின் சிவந்த முகம் அளவுக்கு அதிகமாக
கோபத்தில் சிவந்திருக்க
" உண்மைய சொன்னா, பொத்துக்கிட்டு வருதோ ... பணத்துக்காக உன்
பின்னாடி நாய் மாதிரி சுத்துவானு எதிர்பார்த்தியா ... இப்ப நீயும் வேணாம் உன்
பணமும் வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டா ...
இப்ப என்ன
பண்ண போற..." என்றான் வீரா அமர்த்தலாக .
" வீரா, இப்படி
பேசாதடா கேட்கவே நாராசமா இருக்கு ... என் லட்சுமி அப்படியெல்லாம் பண்ண மாட்டா ... அவளுக்கு
என்னை பிடிக்கும் ... என்னை மட்டும் தான் பிடிக்கும் ..." என்றவனின் குரல்
அளவுக்கு அதிகமாக தழுதழுக்க,
" அப்ப வா, லட்சுமி கிட்ட போய் பேசலாம் ...."
" நான் வரமாட்டேன் ..."
" டேய் என்னடா பிரச்சனை உனக்கு
...."
" உனக்கு கல்யாணம் ஆகி இருந்தா
என் பிரச்சனை என்னன்னு
புரிஞ்சிருக்கும் .... இப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது
..." என்றவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னைத்தானே சமன் செய்து கொண்டு,
" ஆலிமணி வேண்டாம்னா , அப்ப அவ என் பெண்ணை பிச்சை எடுக்க வைக்க முடிவு பண்ணிட்டாளா... பெரிய
எலிசபெத் மகாராணினு நினைப்பு .... கூடிய சீக்கிரம்
இந்த கேஸ ஒன்னும் இல்லாம பண்றேன் பாரு...." என்று கருவியனை ஏதோ ஏலியனை
பார்ப்பது போல் பார்த்த வீரா
" என்ன பெரிய பிரச்சனை .... சும்மா
கதை விடாதடா.. எனக்கு கல்யாணம் ஆகி இருந்தா என் பொண்டாட்டியை
இந்த அளவுக்கு எல்லாம் நான் போக விட்டுடிருக்க மாட்டேன்....
ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் ஈகோ பார்த்துகிட்டு சம உரிம கேட்கிறேனு போலீஸ் ஸ்டேஷன் போற பொண்ணுங்களுக்கு மத்தியில, Lakshmi is a gem of a women....( லக்ஷ்மி ஆக சிறந்த பெண்மணி ) உன் வீட்ல உன் அம்மா உன் தங்கச்சியோட இவ்ளோ வருஷம் அவ குப்பை கொட்டினதே ரொம்ப பெரிய விஷயம் ..." என்றவன் தன் தலை கேசத்தை அழுந்த கோதிவிட்டு,
" நீ வர வேண்டாம் .... நான்
லட்சுமியை பார்த்து எடுத்து சொல்றேன் ..... நிச்சயம் அவ புரிஞ்சிப்பா .... இந்த
விஷயத்தை இன்னைக்கே முடிக்க பார்க்கிறேன் ..."
என்றான் அவ்வளவு எளிதாக அது முடிவுக்கு வரப் போவதில்லை
என அறியாமல் .
ஸ்ரீ - ராமம் வருவார்கள்
.....
Super dear
ReplyDeleteThanks a lot ma
DeleteSuper...Nice reading your story...Fantastic....eagerly waiting for the next episode..
ReplyDeletethanks a lot ma
Deleteஅருமையான தொடக்கம் வாழ்த்துகள்
ReplyDeletethanks a lot ma
DeleteWell moving
ReplyDeletethanks ma
Delete